முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் கவுன்சிலர் ராஜா சீனாவாசன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண தொகுப்புகள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மேற்குதொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ்.நகரில் முன்னாள் கவுன்சிலர் ராஜாசீனிவாசன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட கொரோனா நிவாரண தொகுப்புகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 93-வது வார்டு பகுதியில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு முன்னாள் கவுன்சிலர் ராஜா எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டின் பேரில் 10 கிலோ அடங்கிய அரிசி அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பினை அமைச்சர் செல்லூர் கே ராஜூ வழங்கினார்.

மதுரை மாநகர் மாவட்ட 93-வது வார்டு முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் ராஜா எஸ்.சீனிவாசன். இவர் தனது சொந்த செலவில் கொரோனா காலத்தில் வேலை இழந்து கஷ்டப்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு கர்நாடகா பொன்னி அரிசி 10 கிலோ அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பினையும், பிராமணர்களுக்கு 10 கிலோ பச்சரிசி அடங்கிய நிவாரண தொகுப்பினையும் பெருமளவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். 

அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அழகப்பன்நகர், டி.வி.எஸ். நகர், பாரதியார் நகர், முத்துப்பட்டி, பாண்டியன் நகர், கண்மாய்க்கரை ஆகிய பகுதியிலுள்ள ஆயிரம் பொதுமக்கள் இந்த தொகுப்பினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கொரோனா நிவாரண தொகுப்பினை பெற்று சென்றனர். இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் கவுன்சிலர் ராஜா சீனிவாசன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக மாமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொது மக்களுக்கு அரிசி உள்ளிட்ட கொரோனா நிவாரண தொகுப்பினை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் உள்ள 32,982 நியாய விலைக்கடைகள் மற்றும் 1,450 அமுதம் அங்காடிகளில் பொது மக்களுக்கு தரமான முக கவசங்கள் வரும் 5 - ம் தேதி வழங்கப்படும். முககவசங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து மீண்ட நான் பிளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளேன். என் வயது 50 - ஐ தாண்டி விட்டதால் பிளாஸ்மா தானம் செய்ய முடியவில்லை.  என் உயிரை பற்றி நான் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும்.

கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் மருத்துவமனை செல்வதால் தான் இறப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை.  கொரோனாவால் மட்டுமே யாரும் இறக்கவில்லை. இணை நோய்களால் தான் இறப்பு ஏற்படுகிறது.  கொரோனா வைரஸை  தூசி போல ஊதி தள்ளி விடலாம்.  மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கவே கடவுள்கள் குறித்த சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து