முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் 3 மசோதாக்கள் அறிமுகம்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசும் 3 மசோதாக்களை சட்டசபையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டசபையை கூட்டி 3 மசோதாக்களை கடந்த 20-ம் தேதி நிறைவேற்றியது. 

பஞ்சாப் அரசு சட்டசபையில்  மசோதாக்களை நிறைவேற்றிய சில மணி நேரத்தில் ராஜஸ்தான் அரசும், சட்டசபையில் இதேபோன்று மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என அறிவித்திருந்தது. 

அதன்படி, ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. மாநிலச் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்களை அறிமுகம் செய்தார். 

அதாவது, வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிரான திருத்த மசோதாக்களை அறிமுகம் செய்தார். 

அதன்பின், சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டு திங்கள்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டது. 

காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறதோ அங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றிட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து