முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல சட்டங்கள் என்று ஒரு மனு கூட தாக்கலாகவில்லை: வேளாண் சட்டங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க முடியுமா? முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நல்ல சட்டங்கள் என்று ஒரு மனு கூட தாக்கலாகவில்லை எனவை வேளாண் சட்டங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க முடியுமா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என

தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல் டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 11-ந் தேதிக்கு (நேற்று) தள்ளி வைப்பதாக கூறினர். இதற்கு மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால் கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. 

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் நேற்று விசாரிக்கப்பட்டன. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. 

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. 

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. இவற்றின் மீது நடந்த விசாரணையில் வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

சிலர் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டுள்ளார்.

மேலும் நேற்றைய விசாரணையின்போது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன்? மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு தயாரா? அப்படி செய்தால் விவசாயிகளுடன் பேச நாங்கள் குழு அமைக்கிறோம். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் தலைமை நிதிபதி பாப்டே எச்சரித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து