முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கல் : இன்றுடன் நிறைவு வாபஸ் பெற 25-ம் தேதி கடைசி நாள்

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 

இதனிடையே செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டார். 

அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 22-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள செப்டம்பர் 25-ம் தேதி கடைசி நாள் என்றும் வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.  வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார். 

அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 67 இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி, 9-ம்  தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  

இதில் 5-வது நாளான நேற்று முன்தினம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 24 ஆயிரத்து 607 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 ஆயிரத்து 864 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 298 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 202 வேட்புமனுக்களும் என 33 ஆயிரத்து 971 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 ஆயிரத்து 27 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரத்து 107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 683 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்பு மனுக்களும் என 54 ஆயிரத்து 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

 

இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குசெலுத்தலாம் என்றும் அவர்களுக்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து