முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் மழையால் வெள்ளம் : பக்தர்களை கயிறு மூலம் மீட்ட தீயணைப்பு துறையினர்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருக்குறுங்குடி : நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்களை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மீட்டனர்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் வந்து தரிசனம் செய்வார்கள்.  வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனம் செய்யத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வெள்ளிக் கிழமை முதல் பக்தர்கள் திருமலை நம்பி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய நேற்று வந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது. இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். திருக்குறுங்குடி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நேற்று தண்ணீரில் மூழ்கியது.

இதனால் அங்கு சென்ற பக்தர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதை அறிந்த நாங்குநேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய சுமார் 200 பேரை கயிறு கட்டி மீட்டனர். தொடர்ந்து அங்குள்ள பக்தர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தென்காசி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

நேற்று பிற்பகல் குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி தடாகத்தில் விழுந்து வருகிறது. இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து