முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசனை வழங்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் ஊராட்சிக்குப்பட்ட நல்லூரிமேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி தனது மூத்த மகளை இழந்த வருத்தத்தில் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தனது கணவரும் உயிரிழந்ததையடுத்து போதிய வருமானமின்றி தன்னுடைய மகன், 2-வது மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், 2-வது மகள் ஜோதிகாவிற்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து அந்தக் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளானதோடு பெரும் அச்சமடைந்தனர். அதன்  காரணமாக லட்சுமி, அவரது மகள் ஜோதிகா, மகன் சிபிராஜ் மற்றும் பேரன் ரித்தீஷ் ஆகிய 4 பேரும் சாணிப் பவுடரை உணவில் கலந்து சாப்பிட்டு,  வீட்டில் மயங்கிக் கிடந்ததாகவும், பின்னர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் ஆகியோர் உயிரிழந்ததாகவும், லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

கொரோனாவுக்கான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையையும், அந்தச் குடும்பத்தில் உள்ளவர்களின் மன நிலையையும், அக்கம்பக்கத்தினரால் அவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலையும், அவர்களுடைய பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி புரிவதும், ஆலோசனைகளை வழங்குவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஓர் அரசின் கடமை. 

எனவே முதல்வர்  இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மேற்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து