முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது., தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுகளையும் வெளிப்படுத்தும் திருநாள்.

இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்’ என, பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

நிலமகள் நெற்சலங்கை கட்டி ‘தை.. தை.. தை..’ எனக் குலுங்கி ஆடுகிற தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தி.மு.க அரசு, முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினைப் பல லட்சக் கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியிருக்கிறது. 

தமிழர் திருநாளில் உங்களில் ஒருவனான என்னை நீங்கள் இல்லம் தேடி வந்து சந்திப்பது வழக்கம். அது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கும். ஆனால், கொரோனா அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பொங்கல் நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக, கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அன்பு கலந்த உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும்! அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல், இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து