முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் : கோவையில் தி.மு.க. அரங்கேற்றி வரும் அராஜக செயல்கள் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

கோவையில் தி.மு.க.வினரின் அராஜக செயல்கள் அனைத்திற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்து விட்ட நிலையில், கோவை  மாநகரிலும், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டிருப்பது சம்பந்தமாக, கோவை மாவட்ட கலெக்டருக்கும், கோவை மாநகர காவல் ஆணையருக்கும் புகார் அளித்தும், இது குறித்து காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்துள்ள நிலையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்ற தகவலை தெரிந்து கொண்ட தி.மு.க.வினர், அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வரும் கோவை மாநகரத்தை தற்போது கலவர பூமியாக மாற்றி உள்ளனர்.

கரூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கோவை மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியும், பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியும், தொடர்ந்து தி.மு.க.வினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை நேரம் முடிந்தவுடன், தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என்ற விதிமுறையை மீறி, கோவை மாநகர் முழுவதும் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவுடிகள் மற்றும் குண்டர்கள் வாக்குப் பதிவை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இது, சட்ட விரோதமானது.

இது குறித்து, அ.தி.மு.க.  முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவை மாவட்ட கலெக்டரிடமும், கோவை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

மேலும் மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தி.மு.க.வினர் வழங்கி வருவதாகவும் பல மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவை மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ள, வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரவுடிகள் மற்றும் குண்டர்களை உடனடியாக கைது செய்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தாமல், மெத்தனப் போக்கில் இருக்கும் மாவட்ட கலெக்டர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தி.மு.க.வினரின் மேற்கண்ட அராஜக செயல்கள் அனைத்திற்கும் எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் முறையாக நடைபெறுவதற்கும், வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து