முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட தயங்காத அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம்: மாநில கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி : பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேட்டி

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் விடுதலை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்திருக்கிறது. இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழக அரசினுடைய மூத்த வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எழுவர் விடுதலையில், தி.மு.க. அரசு முனைப்போடு செயல்படும் என்பது தேர்தல் அறிக்கையில் 494-வது வாக்குறுதியாக வழங்கப்பட்டிருக்கிறது. மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தினுடைய உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. 

மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை என்று  நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது மிகமிக முக்கியமான ஒன்று. கவர்னர் செயல்படாத நேரத்தில், நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதியரசர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், ஒன்றிய அரசிடம் கேட்கத் தேவை இல்லை என்பதையும் நீதியரசர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். 

இதன் மூலமாக, மாநில அரசினுடைய அரசியல், கொள்கை முடிவுகளில் தன்னுடைய அதிகார எல்லைகளைத் தாண்டி கவர்னர் தலையிட அதிகாரம் இல்லை என்பது மேலும் உறுதியாகி இருக்கிறது. மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கிறது. 32 ஆண்டுகால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்திருக்கக்கூடிய அந்த இளைஞர் தற்போது விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அந்த பேரறிவாளனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், வரவேற்பையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

தன்னுடைய மகனுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அந்த எல்லை வரை சென்று போராடத் தயங்காத அற்புதம்மாள், தாய்மையினுடைய இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன். தாமதமாக கிடைத்திருந்தாலும், ஒரு மிக முக்கியமான வரலாற்றை பெறக்கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. மனித உரிமைகள் மட்டுமல்ல, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது என்று கூறினார்.   

அதை தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன?

பதில்:- நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம் இது வரையில் வரவில்லை. அது வந்ததற்குப் பிறகு, சட்ட வல்லுநர்களோடு நாங்கள் கலந்துபேசி, வழக்கறிஞர்களோடு கலந்துபேசி அதற்குப் பிறகு அவர்களையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து