முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெய்டு மூலம் அ.தி.மு.க.வை நெருக்குகிறார்கள் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Sellur-Raju 2022 09 18

Source: provided

மதுரை : ரெய்டு மூலம்அ.தி.மு.க.வை நெருக்குகிறார்கள்.இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 114 - வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க.சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 3 - ம் பகுதி அ.தி.மு.க.சார்பில் அதன் பகுதி செயலாளரும், மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான கறிக்கடை முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் முத்தையா, ரஜினி நிவேதா, நெல்லை தளவாய் மற்றும், எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ஜெ.ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், ஏ.பார்த்திபன், பரவைராஜா, கு.திரவியம், எஸ்.டி.ஜெயபாலன், சுகந்தி அசோக், ஜோசப் தனுஷ்லாஸ், ஏ.பார்த்திபன், பாண்டிச்செல்வி ஞானசேகரன், வட்ட செயலாளர்கள் ஜி.மணிகண்டன், ஏ.கே.சுந்தர் மற்றும் ராதாகண்ணன், சமயமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாநகர் சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழகத்தில் பெண்களுக்கு சமஉ ரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும். எம்.ஜி.ஆர். திமுகவுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். திமுகவை வளர்த்தவர். தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். சேர்ந்த பிறகு தான் அந்தக்கட்சியின் கொள்கைகளை படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மக்கள் மத்தியில் பரப்பினார். எம்.ஜி.ஆர். சுடப்பட்டதால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். சாதாரண நபரான கலைஞரை தலைவராக கொண்டு வந்தது எம்.ஜி.ஆர். தன்னை தி.மு.க. தலைவராக்க வேண்டும் என எம்.ஜி.ஆரின் வீட்டில் சந்தித்து பேசியவர் கலைஞர். எளிய குடும்பத்தில் பிறந்தவன் எனக்கூறி மக்களுக்காக உழைப்பேன் எனச்சொல்லி என்னை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கலைஞர் எம்.ஜி.ஆரிடம் கூறினார். மலைப்பாம்பு போல எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு தி.மு.க.வினர் அப்படியே இருப்பார்கள். 

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றாக போஸ் கொடுத்தார். குழந்தைக்கு ஊட்டுவது போல ஒரு தகப்பனாக ஒரு தாத்தாவாக என்ன செய்யனுமே செய்தார்.ஆனால் கடைசியில் சாப்பாடு உள்ள தட்டில் பிஸ்லரி தண்ணீரில் கை கழுவி விட்டார். குழந்தையின் எச்சில் பட்டதால் கையை கழுவினார். பின்னால் சென்று வேறு எதை வைத்து கை கழுவினார் என தெரியவில்லை. மாடியில் இருந்து மக்களை பார்க்கிறார் ஸ்டாலின். எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைந்துவிட்டார். எதையோ எதையோ சொல்லி அ.தி.மு.க. வருமா, ஆட்சி அமைக்குமா என்றெல்லாம் ஸ்டாலின் பேசினார். மக்களுக்கு 5000 கொடுக்க வேண்டும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். 

உதயநிதி என்று செங்கலை தூக்கி காண்பித்தாரோ அன்றே செங்கல் விலை உயர்ந்துவிட்டது. உதயநிதியின் ராசியோ என்னவோ செங்கல் ஜல்லி கட்டுமான பொருட்கள் என எல்லாமே விலை கூடி விட்டது. மக்களை தேடி மருத்துவம் என கூறிவிட்டு எந்த மருத்துவரும் வீடி தேடி வரவில்லை. நீட் ரத்து எனக்கூறி இப்போதும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றனர். மின்கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக்கூறி பணக்காரர்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு  மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். யாருமே தி.மு.க. ஆட்சியில் சுபிட்சமாக இல்லை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இப்போது என்ன பிச்சையா எடுக்கிறார்கள். பொன்முடி, எ.வ.வேலு யார் என எங்களுக்கு தெரியும், ஸ்டாலின், அவர் குடும்பம் அந்த குடும்பத்தின் பின்னணி என்ன, இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது.

ரெய்டால் அ.தி.மு.க.வை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். அ.தி.மு.க. குண்டுக்கே அஞ்சாத தலைவர் வழியிலும், நெஞ்சுரம் கொண்ட தலைவியின் வழிவந்த இயக்கத்தினர். உங்கள் அப்பா கலைஞர் காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் ஒரு நாளும் பயப்பட மாட்டோம். தி.மு.க. அரசு நடந்தால் வரி நின்றால் வரி சும்மா இருந்தலும் வரி போடுவார்கள். மக்கள் பேசாமல் இருப்பதால் மஞ்ச குளிக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் வராது என நினைக்கின்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக திரும்பி விட்டார்கள்  தக்க பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து