முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழுவைக் கூட்டி இறுதி செய்ய வேண்டும்: வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
supreme-courti 20221 01 04

தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழுவை கூட்டி இறுதி செய்ய வேண்டும் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய விண்ணபத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.

ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஓ. பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று முன்தினம் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார்.

மேலும், யார் கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர்களின் கையெழுத்து அங்கீகரிக்கப்படுவது என்பதுதான் விதி. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆவணத்தில் இருக்கும் கையெழுத்து ஏற்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் விரிவான பதிலை சுப்ரீம் கோர்ட் எதிர்பார்த்தால் அதனை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதே போல் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகி விட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகி விட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இ.பி.எஸ், ஒ.பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தற்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் இரு தரப்பு வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்படலாம். இருவரும் பேசி முடிவெடுக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இதற்கு,  எங்கள் வேட்பாளரை ஓ.பி.எஸ் ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்த, இல்லை, இல்லை பொது வேட்பாளரைத்தான் ஏற்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளித்தது.

இரு தரப்பினருமே கையெழுத்திட வேண்டாம். நாங்களே உத்தரவு பிறப்பிக்கிறோம் என்றும், இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் முக்கிய முடிவுகள் எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய், அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.திமுக வேட்பாளரை நிறுத்துவதற்கு இடைக்கால ஏற்பாடாக இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அ.தி.மு.க. பொதுக்குழு முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.  

 ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து இந்த பொதுக்குழுவை கூட்டவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறினர். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய 7 -ம் தேதி இறுதி நாளாக இருக்கும் போது இதில் என்ன முடிவெடுப்பது. இந்த விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் எந்த உத்தரவும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் கூறினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அ.தி.மு.க.வில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்கிற கேள்விக்கு விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுக்குழு முடிவு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பாக தீர்ப்பளித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து