முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கு ஈரோட்டில் முதல் கட்ட பயிற்சி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Electronic-machine 2023 01

Source: provided

ஈரோடு : ஓட்டுப்பதிவு அன்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு 3 கட்ட பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஓட்டுப்பதிவு அன்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி ரங்கம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. 

இந்த பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எப்படி கையாள்வது, பழுது ஏற்பட்டால் அவற்றை எப்படி சரி செய்வது மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை எவ்வாறு கையாளுவது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதே போன்று அடுத்த வாரம் 2-வது கட்ட பயிற்சியும், வரும் 26-ம் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து