முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

சென்னை : வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும்,  வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். சாலையோர வியாபாரிகள்,  கட்டுமானத் தொழிலாளர்கள்,  மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள்,  சுரங்கத் தொழிலாளர்கள்,  பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணிகள்,  விவசாயிகள்,  இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விதியோகிப்பவர்கள்,  காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள்,  குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிக கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள்,  குறிப்பாக பச்சிளம் குழந்தைகள்,  நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள்,  வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் ஆகியோரும் மிக கவனமுடன் வெயிலில் செல்ல கூடாது. அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள்,  திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும்.ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம். ஏனெனில் இத்திரவம் அதிகப்படியான வியர்வையினால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த சோடியம் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவின்படி கொண்டுள்ளது.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  நல வாழ்வு மையங்கள்,  துணை சுகாதார நிலையங்கள்,  அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். – உப்பு சர்க்கரை கரைசல் பொதுமக்களுக்கு வழங்கப்படும். ஓ.ஆர்.எஸ். கார்னரில் வழங்கப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து