முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
Election 2024-04-08

Source: provided

சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த எப்ரல் 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர் அந்தந்த வாக்குச்சாவடியில் இல்லை என்ற புகார் எழுந்தது. சில அரசியல் கட்சிகள் சார்பிலும் அதுபற்றிய புகார்கள் கூறப்பட்டன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவிக்கையில்.,  வாக்காளர் பட்டியலுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்தான் (இ.ஆர்.ஓ.) பொறுப்பாளராக உள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்து, சேர்க்கப்பட்ட பெயர்கள், நீக்கப்பட்ட பெயர்கள், முகவரி மாற்றம் இவை தொடர்பான விவரங்களை இ.ஆர்.ஓ. அளிப்பார். அந்த விவரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் அந்தந்த பகுதி முகவர்களுக்கு தெரியும்.

அதோடு எப்போது வேண்டுமானாலும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை வாக்காளரால் பார்க்க முடியும். பெயர் சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களையும் அளிக்க முடியும். மேலும், தேர்தல் நேரத்தில் கிடைக்கும் அவகாசத்திலும் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். அந்த வகையில், பெயரை சரிபார்த்துக்கொள்ள பல வாய்ப்புகள் தரப்பட்டு உள்ளன.

தற்போது தேர்தல் முடிந்துவிட்டது. இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டுள்ளது தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அல்லது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளிக்கப்பட்டால், வாக்காளர் பதிவு அலுவலருக்கு அந்த புகார்கள் அனுப்பப்படும். அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.

பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தாலும், முகாம்களில் விண்ணப்பம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவை யாரால் பரிசீலிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது? என்பது போன்ற விவரங்கள் அதில் இருக்கும். பெயர் நீக்கப்பட்டிருந்தால், நீக்கத்துக்கு பரிந்துரைத்தவர் விவரமும் அதில் காணப்படும். எனவே, அதை வைத்து பரிசீலித்து, என்ன நிகழ்ந்துள்ளது? என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு, செல்போன் எண் இணைப்பு தொடர்பாக கோர்ட்டுகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன. தற்போது ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்கள், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டாலும் அவற்றை இன்னும் இணைக்கவில்லை. அவை இணைக்கப்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வாக்காளர் பட்டியலில் இருந்து இரட்டை பதிவுகளை சுத்தமாக நீக்க முடியும். ஒருவர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்போது செல்போனில் தகவல் தெரிவிக்கவும் அது ஏதுவாக இருக்கும். இவ்வாறு தெவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார்கள் மீது தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர் பதிவு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து