முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
po

Source: provided

சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் கல்வீச்சு சம்பவங்களும் நேற்று நிகழ்ந்தன. இதனால் சம்பவ இடத்தில் சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஒரு தரப்பினர் மட்டுமே இந்த திருவிழாவை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நடப்பாண்டு மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் நாங்களும் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வருவோம், திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் என்று கூறியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலாக மாறியது. அப்பொழுது தீவட்டிப்பட்டி பகுதி முழுவதும் இருந்த கடைகள் மீது கற்களை வீசப்பட்டதுடன்,  பேக்கரி மற்றும் டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என பத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இருதரப்பு மோதலால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. 

மேலும், கோயில் வழிபாடு நடத்த உரிமைக்கோரிய தரப்பினர் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து கற்களை வீசிய நபர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கைது நடவடிக்கை ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது. 

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும்  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ வைத்த கடைகளில், தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து