முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலு கொடுத்த வேட்பாளர் பட்டியலை தூக்கி எறிந்த சோனியா

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 24 - காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஐவர் குழுவை நிராகரித்து தங்கபாலு கொடுத்த லிஸ்டை சோனியா நிராகரித்தார். இரு முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்பதால் பல முக்கிய தலைவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைக்காது என தெரிகிறது. 

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஆரம்பம் முதலே இழுபறி நீடித்து வருகிறது. இட ஒதுக்கீடு முதல் பிரச்சினை ஆரம்பித்து தற்போது வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் வந்து நிற்கிறது. தி.மு.க., காங்கிரஸ் உறவு உறுதியாக இருக்கிறது என்று கூறி வந்தவர்கள் பிறகு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு டெல்லி வரை ராஜினாமா கடிதத்தோடு சென்று சமாதானமானது காலம் முழுவதும் சொல்லி கைகொட்டி சிரிக்க வேண்டிய வரலாறு. 

காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஐவர் குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சேர்க்காததால் அவர்கள் ஆதரவாளர்கள்  சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். ஐவர் குழு தி.மு.க.விடம் சீட் கேட்டு பெறுவதை விட தங்கள் கோஷ்டிக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஒதுக்குவது என்று போட்டியிட்டதை கருணாநிதி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பார்த்தார். ஒரு மலையையும் சிறு உளி உடைத்து விடும் என்பது போல் கருணாநிதியின் பேரன் வயசு உள்ள ராகுல் கருணாநிதியின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி காங்கிரசுக்கு வேண்டிய தொகுதிகளை பெற்றார். தி.மு.க. தனது பலமான 8 தொகுதிகளை  காங்கிரசுக்கு விட்டு கொடுக்க வேண்டியதாகி விட்டது. 63 தொகுதிகளாக தனது எண்ணிக்கையில் காங்கிரஸ் வளர்த்துக் கொண்டது. இதனிடையே காங்கிரசில் இளங்கோவன் கோஷ்டி பட்டியல், யுவராஜாவின் இளைஞர் காங்கிரசார் பட்டியல், ஜி.கே.வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என அனைவருக்கும் 63 தொகுதிகளுக்குள் பிரித்தாக வேண்டிய நிலைமை.  

இங்கு இரண்டு நாள் விருப்ப மனு பெற்று அனைத்து மனுக்களையும் டெல்லிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தும் பணியை ஐவர் குழுவை நிராகரித்தது. தங்கபாலுவை போட்டு வயலார் ரவி, அகமது பட்டேல், ஆசாத் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார் சோனியா. தமிழ்நாட்டை பற்றி நன்கு அறிந்த சிதம்பரம், வாசன்,  ஈ.வி.கே.எஸ்., ஜெயக்குமார் முதலியவர்களை பயன்படுத்தாமல் தங்கபாலுவை மட்டுமே போட்டு வேட்பாளர் பட்டியலை தயாரிக்க நினைத்தது தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை உண்டு பண்ணியது. 

தங்கபாலு, ஆஸ்கர்,  ஆசாத், வயலார் ரவி, அகமது பட்டேல் ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை ஒரு பட்டியலை தயாரித்தனர். வெளிநாடு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய சோனியாவிடம் மேற்கண்ட குழுவினர் தயாரித்த பட்டியல் தரப்பட்டது. அதில் தங்கபாலுவின் மனைவி முதல் வேண்டிய பட்டவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதும், பழைய தி.மு.க. விசுவாசிகளே மீண்டும் பெயர் பட்டியலில் இருப்பதை தெரிந்து கொண்ட சோனியா பட்டியலை நிராகரித்துள்ளார். போய் புது பட்டியல் தயாரித்து வாருங்கள், 2  முறை எம்.எல்.வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாலு குழுவினர் புதுப்பட்டியலை தயாரித்து வருகிறார்களாம். 

இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு பதவி இல்லையென்றால் காங்கிரசில் உள்ள பல பெரிய தலைவர்கள் உருளும் என தெரிகிறது. தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. டி.யசோதா, பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) ,ஞானசேகரன் (வேலூர்), டி.அமரமூர்த்தி (அரியலூர்),  கோபிநாத் (ஓசூர்),  சிவராஜ் (ரிஷிவந்தியம்),  கோவை தங்கம் (வால்பாறை), ராம்பிரபு (பரமகுடி), கே.ஆர்.ராமசாமி (திருவாடனை), சுந்தரம்(காரைக்குடி),  வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர்.ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் சீட் கிடைக்காது. இதில் பலரும் ஜி.கே.வாசன் கோஷ்டி. பலர் கருணாநிதியின் விசுவாசிகள். (காங்கிரசில் உள்ள கருணாநிதி கோஷ்டி) இவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால் கருணாநிதி காங்கிரசுக்குள் காய் நகர்த்தும் பல வேலைகள் நடைபெறாது. இதுபோக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்,பி.வி.ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. இதனால் காங்கிரசுக்குள் குத்து வெட்டு மேலும் அதிகமாகும் என தெரிகிறது. தங்கபாலு தனது மனைவிக்கு மயிலாப்பூரில் சீட்டு வாங்கி தருவதால் அங்கு போட்டியிடும் எண்ணத்தில் உள்ள கராத்தே தியாகராஜன் கடும் வெறுப்பில் உள்ளார்.  

வேட்பு மனுதாக்கல் 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிய உள்ளது. இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலே தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.  இன்று பட்டியல் வெளியானால் இரண்டு நாளைக்குள் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டவுடன் காங்கிரசில் பெரும் ரகளை காத்திருக்கிறது. தற்போது டெல்லியில் இருக்கும் யசோதாவிற்கு சீட் தராவிட்டால் அங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லியிலும், சென்னை சத்தியமூர்த்திபவனிலும் தங்கபாலுவின் கொடுபாவியை கொளுத்த எதிர்ப்பாளர்கள் தயாராகி வருவதால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சோனியாவின் திட்டப்படி பழைய தலைகளை புறக்கணித்துவிட்டு புதுமுகங்களை போட்டால் பெரும் ரகளை வெடிக்கும். தமிழகம் முழுவதும் தொகுதிகளில் அதன் பிரதிபலிப்பு இருக்கும். புதுமுகங்களை ஜெயிக்க விடாமல் பழைய தலைகள் உள்வேலைகள் செய்யும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தி.மு.க.வை நெருக்கி தொகுதிகளை பிடுங்கியதால் தனக்கு 2 கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 1 கண் போக வேண்டும் என்று தி.மு.க. மேலிடம் முதல் தொண்டர்கள் வரை முடிவெடுத்து உள்ளதால் பிரச்சினை உள்ளது. இதில் இந்த பிரச்சினையும் உள்ளதால் தமிழகத்தில் பல தொகுதிகளிலும் காங்கிரஸ் வெல்வது கேள்விக்குறியே. 

தன்னால் நடக்க முடியாதவன் ஓடுகிறவனை குறை சொன்னானாம். அதுபோல் தற்போது இவர்களுக்குள் ஆயிரம் குத்துவெட்டு, குழிப்பறிப்பு, கூட்டணி மோதல் இருக்கும்போது நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று உள்ளுக்குள் பொறுமியபடி தி.மு.க. கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிப்பதுதான் விந்தையிலும் விந்தை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago