முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.எல்.வி. - சி 16 ராக்கெட் விண்ணில் பாய்கிறது

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      வர்த்தகம்
Image Unavailable

சென்னை,ஏப்.20 - 3 செயற்கை கோள்களுடன் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பி.எஸ்.எல்.வி. - சி 16 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ சார்பில் இந்திய விஞ்ஞானிகளால் பி.எஸ்.எல்.வி. - சி 16 ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். 

முன்னதாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கியது. பி.எஸ்.எல்.வி. சி 16 ராக்கெட்டில் 3 அதி நவீன செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1206 கிலோ எடையுள்ள ரிசோர்சா 2 என்ற செயற்கை கோள் ராக்கெட்டில் அனுப்பப்படவுள்ளது. 

இதில் 3 கேமிராக்கள் உள்ளன. அதன் மூலம் விவசாய பயிர்களின் ஆரோக்கியம், நிலத்தடி நீர், வனப்பகுதி ஆராய்ச்சி, ஏரி மற்றும் குளங்களின் தண்ணீர் அளவு, இமய மலையில் பனி உருகுவது கண்டறியப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வைக்கும் பணிகளை செய்யும். ரஷ்ய கூட்டுடன் தயாரான 92 கிலோ எடையுள்ள யூத்சாட் என்ற செயற்கை கோளும் இத்தோடு அனுப்பி வைக்கப்படுகிறது. 

சிங்கப்பூரை சேர்ந்த நனியான் பல்கலைக் கழகம் உருவாக்கிய எக்ஸ்சாட் செயற்கை கோள்(106 கிலோ) பூமியை படமெடுத்து அனுப்பி வைக்கும் பணிகளை செய்வதற்காக மேற்கூறிய 2 செயற்கை கோள்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. இது குறித்து இஸ்ரோவின் மைய இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில், 

பி.எஸ்.எல்.வி. சி 16 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் செயல்பாடுகள் உள்ளது. இன்று காலை 10.12 க்கு பாய தயார் நிலையில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் ஜி - சாட் 12 என்ற செயற்கை கோள் உள்ளிட்ட மேலும் சில செயற்கை கோள்களை ராக்கெட் மூலம் அனுப்ப இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்