முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் உணவு அமைச்சர்கள் மாநாடு: அமைச்சர் பேச்சு

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது, ஆகையினால் உணவு பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நேற்று (13.2.13) நடைபெற்றது. மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் என்.பி.நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது:-

தமிழ்நாடு பொது விநியோக திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உணவு பாதுகாப்பை எந்த விதிவிலக்கு இல்லாமல் உறுதிப்படுத்த முடிகிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோக திட்டம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்படுவதால், தமிழக முதல்வர் இதை அமல்படுத்த உறுதியாக உள்ளார். தமிழ்நாட்டில் அரிசி மட்டுமின்றி கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோக திட்டமாக பருப்பு, பாமாயில் போன்றவையும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மற்றொரு தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால், மாநிலத்திலுள்ள நியாய விலை கடைகள் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு கழத்தாலும், கூட்டுறவு சங்கங்களாலும் நடத்தப்படுகின்றது. ஒரு சில நியாயவிலை கடைகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் நடத்த அனுமதிக்கப்படுகின்றது. இத்தகைய கடைகளை தனியார் துறை நடத்த அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் ஆண்டு உணவு மானியம் ரூ.4,900 கோடியாகும். வலுவான நிர்வாக பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் குறைத்தீர்க்கும் திட்டம் ஆகியவை பொது விநியோக கூட்டத்தில் இடம் பெற்றுள்ளன.  

தமிழகத்தில் பல தலைமுறைகளாக அமல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தை ஒப்பிட்டு காட்டி, தற்போது மத்திய அரசு அமல்படுத்தி வரும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள  எதார்த்தமான குறைபாடுகளை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வரின் கருத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நம்முடைய ``சமஷ்டி அமைப்பில் மாநிலங்கள் நேரடியாக மக்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளதால், பிரபலமான நலத்திட்டங்களை தேர்வு செய்திவதிலும், அமல்படுத்திலும் மாநிலங்களுக்கு உரிமைகள் இருக்க வேண்டும்'' இவ்வாறு தமிழக முதல்வர் கூறிய கருத்து  நிலைக்குழுவால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 2012 பிப்.8, 9 தேதிகளில் மாநிலங்களின் உணவு மற்றும் விவசாய அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வரின் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இறுதி செய்யும் முன்பு, சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன். 

தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு மசோதா குழப்பம் மற்றும் அரைகுறை தன்மையால் குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. உதாரணமாக உத்தேசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குழுக்கள் பற்றி வகைபாடு இதை அமல்படுத்துவதில் விளக்கமாக இல்லை. நிலைக்குழுவால் கூறப்பட்டுள்ளதுபோல்,  வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களின் சமூக பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு நிறைவு பெறவில்லை. குறிப்பிட்ட செயற் திட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முடிவு எடுக்கவில்லை என்று நாங்கள் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நிறைவு செய்வதற்கு முன்பு அமல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிக்கக்கூடாது. இந்த வகைப்பாட்டு பிரிவுகள் அறிவியல் ரீதியானதோ, ஒப்புகொள்ளகூடியதோ இல்லை. மத்திய அரசின் இந்த மசோதாவின் பயன்பெறும் மக்கள் தொகையின் சதவிதம்  கிராமப்புறத்தில் 75 சதவீதமாகவும், நகர்புறத்தில் 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். ஏன்என்றால் இங்கு பெரும் பகுதி, நகர்புறமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு உத்தேசித்துள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பிரிவுகளும் இந்த மசோதாவின் கூறப்பட்டுள்ள வகைபாடுகளும் நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு பாதுகாப்பு வழங்குவதை கேலிகூத்து ஆகவிடும். நகர்புறங்களின் 50 சதவிதம் என்பதை கிராமப்புறங்களை போலவே 75 சதவிதமாக்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன். 

இயற்கை பேரிடர்களான வறட்சி, வெள்ளம், நெருக்கடி போன்ற காலங்களில் நலிந்த பிரிவை சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை வறுமை கோட்டுக்கு கீழே அதிகரித்து விடுகிறது. பயனாளிகளின் அடையாளம் காண்பது, சலுகை பெற்ற வீடுகள், பொதுவாக உள்ள வீடுகள், பட்டினியால் வாடும் நபர்கள், சிறப்பு குழுக்கள், கைவிடப்பட்ட நபர்கள், வீடற்றவர்கள் ஆகியவர்கள் குறித்து எந்த விளக்கமும் இல்லை. இதனால் பல தவறுகள் ஏற்படும், இவற்றை நடைமுறை பிரச்சனைகளை கொண்டு தீர்க்க வேண்டும். 

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளை ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவுகளாக பிரிக்கலாம் என்று ஏற்கனவே பொதுவிநியோக திட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களை ஏ பிரிவில் சேர்க்கலாம் என்றும் நிலைக்குழு கூறியுள்ளது. பொது விநியோக திட்டத்தில் 50 சதவிதத்தை மத்திய அரசு ஏற்கலாம் என்பது எங்களுடைய கருத்து. சலுகை பிரிவினர் பொது குழுவினர் அனைவருக்கும் மாதம் 5 கிலோ எல்லோருக்கும் வழங்கிடலாம் என்பது நிலைக்குழுவின் கருத்து. தமிழ்நாட்டின் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 12 கிலோ தேவைப்படுகிறது. ஆனால் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்தின் 5 கிலோ மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்திலுள்ள எண்ணிக்கை அடிப்படையில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 10 கிலோ வழங்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துகிறோம். 

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதுபோல், உணவு பாதுகாப்பு திட்டத்தில் நேரடி பணபட்டுவாடாவை நாங்கள் எதிர்க்கிறோம். இதனால் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைக்காது, குழந்தைகள் பட்டினி கிடக்க நேரிடும். மேலும், உணவு கூப்பன் முறை எங்கள் மாநிலத்திற்கு ஏற்றது அல்ல. எனவே இந்த யோசனைகளை இந்த மாநிலங்களுக்கு வற்புறுத்தகூடாது. தற்போதுள்ள மாநிலங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டை உணவு பாதுகாப்பு மசோதா பிரச்சனை ஏற்படுத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் 2.96 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதால் நிலைமாறி மாதந்தோறும் 2.24 லட்சம் மெட்ரிக் டன்தான் ஒதுக்க நேரிடும். தற்போதுள்ள ஒதுக்கீட்டை பாதுகாக்காவிட்டால் தமிழ்நாட்டின் பொது விநியோக திட்டம் பாதுகாப்புக்குள்ளாகும். எனவே தற்போதுள்ள உணவு தானிய திட்டத்தை பாதுகாக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை திருத்தவேண்டும். நிலைக்குழுவின் சிபாரிசுப்படி மத்திய தொகுப்பில், ஒதுக்கீட்டில் குறைவு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஏற்கொள்ளவதாக இல்லை. இது மேலும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏன்என்றால், இதை விலைக்கி  பொது சந்தையில் வாங்க முடியாது. எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், இறக்குமதி மூலம் அதை சரிசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் கடமையாகும்.  

ஆகையினால் உணவு பாதுகாப்பு அமைப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன். தற்போது தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோக திட்டமுறையை மேலும் சிறப்பாக அமல்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்