முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை சம்பவ எண்ணிக்கை சதவிதம் குறைவு: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - தி.மு.க ஆட்சியிலிருந்ததைவிட கொலை சம்பவங்களின் எண்ணிக்கை சதவிதம் குறைந்து இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பேசியதற்கு பதில் அளித்து  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

கொலை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டார். எனது முந்தைய ஆட்சிக் காலத்தை எடுத்துக் கொண்டால், 2003 ஆம் ஆண்டு 1487 என்று இருந்த கொலை சம்பவங்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து 2006 ஆம் ஆண்டு 1274 என்ற அளவிலே இருந்தது.  ஆனால்,  கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில்  கொலை சம்பவங்களின் எண்ணிக்கை 25.5. விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டொன்றுக்கு, சராசரியாக 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

நான் 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கொலை சம்பவங்களின் உயர்வு சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, 2011 ஆம் ஆண்டு கொலை சம்பவங்களின் உயர்வு சதவீதம் 1.86 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு  3.38 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாலும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடும்போது,  கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 

2 விழுக்காடு குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

கொலைகள் திடீரென ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்புகளின் காரணமாக நிகழ்பவை என்பதால், காவல் துறையினரால் அதனைத் தடுப்பது இயலாத காரியமாகும்.  எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, காவல் துறையின் செயல்பாட்டை மதிப்பிடுவது பொருத்தமாக இருக்காது. காவல் துறையின் செயல்பாட்டை மதிப்பிட வேண்டுமென்றால், ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகள் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில், 2010 ஆம் ஆண்டு 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டு 137 ஆக குறைந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையே எடுத்துக் காட்டுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்