முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்போம்: டாக்டர் கிருஷ்ணசாமி

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை மே-31 - அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உறுதுணையாக இருப்போம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்த அவர் மேலும் கூறியதாவது:

விலையேற்றம், மின்வெட்டு, மணல் மற்றும் கனிமவளங்கள் கொள்ளை, ஸ்பெக்டரம் ஊழல், போன்ற மக்கள் விரோத நடவடிக்கையால் தமிழக மக்கள் தி.மு.க. அரசை வீழ்த்தி விட்டு அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்துள்ளனர். அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 10 நாட்களுக்குள் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட இலவச அரிசி திட்டம், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலி மற்றும் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ஆணை பிறப்பித்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய நாங்கள் உறுதுணையாக இருப்போம். வட மாவட்டங்களுக்கு இணையாக தென் மாவட்டங்களிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளம், மருத்துவ வசதி ஆகியவை கிடைக்க சட்டமன்றத்தில் குரல்கொடுப்போம். தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கவும் அரசை வலியுறுத்துவோம். ஒட்டபிடாரம் தொகுதியில் 120க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் கிடைக்கவில்லை. அந்த கிராமங்களில் ஆய்வுசெய்து 30 நாட்களுக்குள் பாதுகாக்கப்பட்ட ஆற்றுநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாடு, தெய்வச்செயல்புரம், வாகைகுளம்,புதுக்கோட்டை, உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பேரூந்துகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அந்த இடங்களில் இன்னும் ஒருவார காலத்திற்குள் பேரூந்துகள் நின்று செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமச்சீர் கல்வி சரியான முறையில் இல்லாததால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பின்னர் சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும். இதனை காரணமாக வைத்து தனியார் பள்ளிகள் அதிக கட்டண கொள்ளையில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம். முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு பாதகமான செயல்களை செய்யமாட்டார். தமிழகத்தில் நல்ல அரசு இருக்கும்போது எந்தவிதமான போராட்டமும் நடத்த தேவையில்லை. மக்களுக்கு தேவையானதை அரசே செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்