முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணல் விலை குறைந்தது: தொழிலாளர்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.30 - மணல் விலை ரூ. 3 ஆயிரம் குறைந்தது பற்றி மகிழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் திளைத்துள்ளனர். மேலும் விலை குறையும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை ஒரு லாரி மணல் 3 யூனிட் ரூ. 6 ஆயிரம், 7 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தேர்தல் நேரத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் பல மூடப்பட்டன. இதனால் மணல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு லாரி மணல் ரூ. 14 ஆயிரமாக அதிகரித்தது. இதனால் கட்டுமான பணி பாதித்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் மணல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனையை அரசு கண்காணித்தது. 

லாரிகள் தேங்கி நிற்காமல் விரைவாக மணல் லோடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது வரையில் இல்லாத அளவிற்கு தினமும் 3 ஆயிரம் லோடுகள் மணல் நிரப்பி அனுப்பப்பட்டன. 

இதனால் மணல் விலை திடீரென சரிந்தது. லோடு ரூ. 14 ஆயிரமாக இருந்தது ரூ. 11 ஆயிரமாக குறைந்தது. இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது, 

ஏற்கனவே செயல்பட்ட மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும். வேலூர் மாவட்டம் ஆற்காடு சக்கரமல்லூரில் 4 குவாரிகள் செயல்பட்டன. அங்கு தற்போது ஒரு குவாரி மட்டுமே இயங்குகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் செயல்பட்ட 9 குவாரிகளில் தற்போது 2 மட்டுமே இயங்குகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆத்தூர் பழவேரி குவாரிகள் மட்டம் செயல்படுகின்றன. அங்கிருந்து போன வாரம் அதிகளவில் மணல் விநியோகம் செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் லோடு வழங்கினார்கள். அதனால் மணல் விலை ரூ. 3 ஆயிரம் குறைந்துள்ளது. ஆற்காட்டில் செயல்பட்ட குவாரியை நிறுத்தினால் மணல் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. குவாரியில் மணல் நிரப்பிய லாரிகளுக்கு பில் கொடுப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் லோடு வெளியே செல்வதற்கு தாமதமாகிறது. 

எனவே பில் வழங்க ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மணல் குவாரி திறக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 6 மணல் குவாரிகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளனர். அவற்றை உடனே திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்