முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வியின் சொத்துக்களை முடக்க திட்டம்?

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ.17 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டி.வியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாக பெற்ற டி.பி. ரியாலிட்டி உரிமையாளர் ஷாகித் உசேன் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தனது துணை நிறுவனமான குசேகான் ப்ரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடியை வழங்கியது.
முதலில் இந்த பணம் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஷாகித் உசேன் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோர் இந்த பணம் அங்கிருந்து படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கிருந்துதான் ரூ. 200 கோடி கலைஞர் டி.விக்கு வந்து சேர்ந்தது. அந்த பணமும் கடந்த 2008, 2010 ம் ஆண்டுகளில் 33 தவணைகளாக வந்து சேர்ந்தது. ஆனால் இதை சினியுக் நிறுவனம் தங்களுக்கு கடனாக வழங்கியது என்றும் அதனை வட்டியுடன் சேர்த்து ரூ. 214 கோடியாக திருப்பி தந்து விட்டதாக கலைஞர் டி.வி. கூறியது. ஆனால் இதனை சி.பி.ஐ. ஏற்கவில்லை.
2 ஜி விவகாரம் வெடித்த பின்பு பிரச்சினையில் இருந்து தப்புவதற்காகத்தான் இதை கலைஞர் டி.வி. கடன் போல காட்டுகிறது என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில்தான் தி.மு.க. எம்.பி. கனிமொழி,  கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க களமிறங்கியது அமலாக்கப் பிரிவு.
முதல் கட்டமாக கலைஞர் டி.விக்கு பணம் தந்த ஷாகித் உசேன் பல்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள்ளிட்ட 4 நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கப்பிரிவு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இப்போது கலைஞர் டி.வி., குசேகான் ப்ரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆகிய நிறுவனங்களின் ரூ. 135 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு அடுத்த உத்தரவை பிறப்பிக்கவுள்ளது. இதன்படி 3 நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டப்பிரிவு 4 ன் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்