முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.25 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்ட நிலையில் தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு தி.மு.க எம்.பி. கனிமொழி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னதாக இந்த மனு வரும் டிசம்பர் 1 ம் தேதி விசாரிக்கப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கைதாகி கடந்த 6 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் மாதம் 1 ம் தேதி நடக்கும் என்று ஐகோர்ட் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் 2 ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்கள் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தனர். 

இவர்களது கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே 2 ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆ. ராசா இதுவரையிலும் ஜாமீன் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்