முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் சிறை பிடிப்பு: கருணாநிதி கண்டனம்

திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்து தரப்பினரும் எதிர்க்குரல் எழுப்பியதற்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டதையொட்டி, அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தாயகம் திரும்பினர்.
மரண மேடையிலிருந்து தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் மீண்டு வந்ததால், லட்சோப லட்சம் மீனவர் குடும்பங்களில் பெருக்கெடுத்த மகிழ்ச்சி வெள்ளம் வடிவதற்குள், மீண்டும் இடி விழுந்ததைப் போல, கச்சத்தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று சிறைப்பிடித்து, தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இந்த பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என்று எச்சரித்தனர்.
இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தங்கள் வலையினை கடலிலேயே போட்டுவிட்டு கரை திரும்பினர். டீசல் தீர்ந்து போனதால், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகினை ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, அதிலிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.
மேலும், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த இரு விசைப்படகுகளையும் கைப்பற்றி, அதிலிருந்த பத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.
சென்ற வாரம் தமிழகத்தை சேர்ந்த மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பேச்சுவார்த்தை நடைபெறும் வரையிலும் சர்வதேச கடல் எல்லையை கடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, தாங்கள் யாரும் எல்லையைத்தாண்டவில்லை என கரை திரும்பிய ராமேஸ்வர மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 24 தமிழக மீனவர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர்; தமிழக மீனவர்களுடைய 82 படகுகள் இன்னும் இலங்கையால் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில், எல்லை தாண்டாமல் இருந்தபோதே, மேலும் 14 தமிழ் மீனவர்களை சிறைப்பிடித்து சென்றிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தொடர்ந்து சொல்லொணாத்துயரங்களுக்கு ஆளாகி வரும் மீனவர்களின் பிரச்சனையை, நேற்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய அரசின் உடனடி கவனத்திற்குக்கொண்டு வந்து, தீர்வு காணத்தக்க அழுத்தம் தரவேண்டுமென்று அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து