முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1,000 பரிசு வழங்குவது எப்படி? கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை

சனிக்கிழமை, 5 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரேசன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சுற்றறிக்கை...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தை நேற்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை பொது மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றி உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சோ.மதுமதி மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கண்காணிப்பு...

அதில் கூறப்பட்டு இருப்பதாவது., திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இப்பணி நாளை 7-ம் தேதி முதல் தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். ரே‌சன் கடைகளில் 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும். 1000 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பிரித்து வழங்க வேண்டும்.

ரொக்கமாக வழங்க...

பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வங்கி வழியாக செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரே‌சன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.சென்னை உள்பட 10 மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைவாக வழங்கிட கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரே இடத்தில் பல ரே‌சன் கடைகள் இருந்தால் கூடுதல் மேஜை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அந்தந்த பகுதி காவல் துறை ஒத்துழைப்பையும் பெற வேண்டும்.

விளம்பரம் செய்ய...

பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த தேதியில் ரே‌சன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரு வாரியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கான தகவல்கள் தெளிவாக ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இறுதியான ஓரிரு நாட்களில் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.

ஆதார் அட்டையை...

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்த பின்புதான் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவு சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிட வேண்டும். குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்புதல் பெற வேண்டும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும். தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு ஆணையாளர் மதுமதி அந்த சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து