முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மைய இரண்டாம் பிரிவு: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 31 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடிய 504 படுக்கை வசதி கொண்ட கோவிட் சிகிச்சை மைய இரண்டாம் பிரிவினை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர் 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 800 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் மொத்தம் 864 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 07.05.2021 அன்று சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாக சென்று ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். 

அதன் தொடர்ச்சியாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 360 படுக்கைகள் கொண்ட முதல் பிரிவு உடனடியாக துவங்கப்பட்டது. இந்த முதல் பிரிவில் மொத்தமுள்ள 360 படுக்கைகளில் 300 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. இம்மையத்தில் 11.05.2021 .அன்று முதல் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்பொழுது கோவிட் தொற்று பாதித்த 250க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த சிகிச்சை மையத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குறைந்த அளவு ஆக்ஸிஜன் இணைப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நபர்கள் மருத்துவமனையின் அறிவுறுத்தலின்படி இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வர்த்தக மையத்தின் 2வது பிரிவில் 504 படுக்கைகளுடன் கோவிட் சிகிச்சை மையம் தயார்நிலையில் உள்ளது. இதில் 500 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் (Screening Centre) உள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்படி மட்டுமே இங்கு தொற்று பாதித்த நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் விலையில்லாமல் தரமான உணவு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோவிட் சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ராஜ கோபால சுங்கரா, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயண பாபு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, மருத்துவ கல்வி இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து