முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

திங்கட்கிழமை, 6 மே 2024      உலகம்
Benjammin 2024-01-02

Source: provided

டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். 

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

சமீபத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தனது குழுவை அனுப்பவில்லை என தெரிகிறது. இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், ரபாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கெரெம் ஷாலோம் எல்லையில் உள்ள இஸ்ரேல் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார். 

இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் கூறினார். படைகளை திரும்ப பெற்று போரை நிறுத்தினால் ஹமாஸ் படையினர் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறி, மீண்டும் காசாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவர்களின் ராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவார்கள். அத்துடன், இஸ்ரேல் குடிமக்களை அச்சுறுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையை ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து