முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
CM-1-2025-06-20

சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் ரூ.36.18 கோடியில் கல்விசார் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர், திருச்சி...

தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 36 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடம், துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தீவிரமான கவனம்... 

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாக பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாடு முதலிடம்... 

மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

மானியக் கோரிக்கை....

ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாடு முதல்வரால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

முதல்வர் அறிவிப்பு...

அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர்கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வரால் 30.5.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

1,120 மாணவர்கள்....

அதன்படி தமிழ்நாடு முதல்வரால் நேற்று 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்.முதல்வரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

புதிய குடியிருப்புகள்.... 

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரில்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர்  திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து