முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்பாடு தங்கப்பல்லக்கில் இன்று வருகை

வெள்ளிக்கிழமை, 1 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

அலங்காநல்லூர் - கள்ளழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு அழகர் இன்று மாலை தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். அவரை வரவேற்க 410 மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளன.மதுரை அருகே அழகர் கோவிலின் முக்கிய திருவிழாவான சித்திரைப் பெருந்திருவிழா நேற்று முன் தினம் மாலை தொடங்கியது. இதை யொட்டி மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று மாலையும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு 18ம் படி கருப்பணசுவாமி கோயில்முன், தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். வழியில் உள்ள கள்ளந்திரி, அப்பன் திருப்பதி மண்டபங்களில் எழுந்தருள்கிறார். 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூன்றுமாடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பர்.

வழியில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அன்றிரவு 12 மணிக்கு தல்லாக்குளம் பெருமாள் கோயிலில், திருவில்லிபுத்தூர் ஆண்டாளுடைய திருமாலை அணிந்து வெட்டி வேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளுவர். திருவிழா வின் முக்கிய நிகழ்வான, மே 4 அன்று வைகை ஆற்றில் காலை 6.45 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி இறங்குகிறார்.அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சு நடைபெறும்.

பின்னர் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்று இரவு எழுந்தருள் காட்சி தருகிறார். 5ம் தேதி காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு, பின்னர் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். 6ம் தேதி அதிகாலை மோகன அவதாரத்தில் அழகர் காட்சிதருகிறார். அன்று பிற்பகல் ராஜ திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு செல்கிறார்.

அங்கு அன்றிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். மே 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதி மண்டபத்தில் காட்சிதருகிறார். 8ம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று இருப்பிடம் சேருகிறார். 9ம் தேதி உற்சவ சாந்தி, மஞ்சள் நீர் சாற்றும் முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்தாண்டு சுமார் 410 மண்டபங்களில் அழகர் எழுந்தருளிகிறார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் பணியாளர்களும் செய்துள்ளனர்.

அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக தங்கக்குதிரை வாகனம், மண்டுக மகரிஷிக்கு சாபவிமோசனம் தரும் கருடவாகனம், தேனூர் மண்டபத்தில் எழுந்தருள சேஷ வாகனம் ஆகியவை அழகர் கோவிலில் இருந்து லாரியில் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு குதிரை வாகனமும், தேனூர் மண்டபத்திற்கு கருடவாகனமும், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு சேஷவாகனமும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து