முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் வசைபாடும் எதிர்க்கட்சிகள் : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க.வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள்  வசைபாடுகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.  அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏக்களின் இல்லத் திருமணங்களை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரே மேடையில் நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. அவர்களது ஒரே குறிக்கோள் மக்கள் சக்தி படைத்த மாபெரும் இயக்கமான அ.தி.மு.க.வை வசை பாடுவது தான். நம் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் நம்மை வசை பாடுகிறார்கள். இதுதான் நம் வளர்ச்சியின் அளவுகோல். பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு வளர வேண்டும்" என்று அடிக்கடி அண்ணா கூறுவார். அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் நமது எம்.ஜி.ஆர் தோற்றுவித்த மாபெரும் இயக்கமான அ.தி.மு.க. என்பதை இங்கே சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

"உழைப்பால் வெற்றியை உருவாக்கு. முயற்சியை அதற்கு எருவாக்கு" என்பதற்கேற்ப, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கழகக் கண்மணிகளாகிய நீங்கள் எல்லாம் களப் பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? நிச்சயம் இதைநீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு  முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்