முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை அச்சுறுத்திய 'நாடா' புயல் வலுவிழந்தது : தமிழகம் - புதுவையில் மிதமான மழை

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தை அச்சுறுத்திய 'நாடா' புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. இதனால் தமிழகம் - புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும்,இன்று காலை புயல் கரையை கடக்கும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

'நாடா' புயல்

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் இலங்கை அருகே செவ்வாய் கிழமை குறைந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக 'நாடா' உருவானது. அதன்பிறகு அது தென் மேற்கு திசை நோக்கி அதாவது தமிழகம் நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை அது புயலாக மாறி மிகவும் வலுவான நிலையை அடைந்தது. நேற்று முன்தினம் மதியம் அந்த புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. அன்று இரவே 'நாடா' புயலின் வேகம் மேலும் அதிகரித்தது.

துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு

நேற்று காலை 'நாடா' புயல் தமிழக கடலோரப் பகுதியை நெருங்கி வந்தது. புயல் நெருங்கி விட்டதால் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. கடலும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தவர்களும் அவசரம், அவசரமாக திருப்பி அழைக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் மழை

'நாடா' புயல் கடலோரப் பகுதியை நெருங்கி வந்ததால் தமிழ்நாடு- புதுச்சேரியில் நேற்று காலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தூறலும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று மதியத்துக்குப் பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. நேற்றும், இன்று அதிகாலையும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்றும், பொது மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டு இருந்தது.

புயல் வலுவிழந்தது

இந்த நிலையில், நேற்று காலை 'நாடா' புயலின் நகர்விலும், வேகத்திலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அந்த புயல் வலு இழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘'நாடா'’ புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் மேல் அடுக்குக்கும் கீழ் அடுக்குக்கும் இடையே காற்றின் வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 'நாடா' புயல் வலு இழந்துள்ளது. இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி வருகிறது.

இன்று கரையை கடக்கும்

'நாடா' புயல் வலு இழந்தாலும் அது இன்று அதிகாலை கடலூர்-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம்-புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில் மழை மிதமாக இருக்கும். அடிக்கடி தரைக்காற்று வீசும். வானம் மேக மூட்டமாக காணப் படும். புயல் வலு இழந்தாலும் மீனவர்கள் இன்று கடலுக் குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தயார் நிலையில் மீட்புக்குழு

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், வானூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  கல்லூரிகளில் நேற்றும், இன்றும் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பலத்த மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளில் சிக்குபவர்கள் உதவி தேவைப்பட்டால் 1070, 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்