முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.2.94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் :கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(20.02.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும்,  புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 318 மனுக்கள் வரப்பெற்றன.மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 மகளிருக்கு ரூ.16,300 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், கலெக்டர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்கிட 4 நபர்களுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.80,000 மதிப்பீட்டில் 4 கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதியுதவியினையும், 1 மாற்றுத்திறனாளிக்கு தையல் தைக்கும் கடை வைப்பதற்கு ரூ.20,000 நிதியுதவியினையும் என 5 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1.00 இலட்சம் நிதியுதவியினையும், மாவட்ட தொடக்கல்வி அலுவலகத்தின் சார்பில் 2016-ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடிய பள்ளிகளிலிருந்து மாவட்ட அளவில் தேர்வு பெற்ற முதல் 2 பள்ளிகளான சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.25,000 சிறப்பு நிதியுதவிக்கான காசோலையினையும், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.12,500 சிறப்பு நிதியுதவிக்கான காசோலையினையும், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 22 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார். அதனை தொடர்ந்து  கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை  பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5800 வீதம் ரூ.17,400 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.1,20,000 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,200 வீதம் ரூ.3,600  மதிப்பிலான காதொலிக்கருவி களையும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.2,94,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம்  வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்