முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க கட்டிடத்தில் பாதை ஆக்கிரமிப்புக்கான ஆதாரம் இல்லை: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் சங்க கட்டிடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தியாகராயா நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகள் பிரகாசம் சாலைக்கு செல்வதற்கு வழியின்றி சுற்றிச்செல்ல நேரிடுகிறது.
அந்த 33 அடி பொதுப்பாதையை அதிகாரிகள் சட்டவிரோதமாக நடிகர் சங்கத்திற்கு பட்டாப்பதிவும் செய்து கொடுத்துள்ளனர். எனவே முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், இதுதொடர்பான உண்மைநிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இளங்கோ என்ற வக்கீலை நியமித்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வக்கீல் இளங்கோ அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘நடிகர் சங்க கட்டிடம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. அப்பகுதியில் பாதை இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை’ என்று கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வக்கீல், இந்த அறிக்கை ஒருதலைபட்சமாக உள்ளது என்றார். இவரது வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கத்தின் வக்கீல், மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். நீதிபதிகள் இந்த வழக்கை 16-ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து