முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியையும், ஆட்சியையும் எவராலும் அசைக்க முடியாது: அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

அரியலூர், ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை எவராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

அரியலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி எம்.ஜி.ஆர். திருவுருவபடத்தை திறந்து வைத்தார். பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-

ஒரே தலைவி அம்மா ...

ஜெயலலிதாவினுடைய ஆட்சியிலே ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்திலே உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆறாண்டு காலத்திலே அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி 21, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 24, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி 16, பொறியியல் கல்லூரி 4, இப்படி ஆறு ஆண்டுகளிலே 65 கல்லூரிகள் உருவாக்கி, நம்முடைய மாணவ செல்வங்கள் ஏழை, எளிய, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைந்த கட்டணத்திலே அந்தந்த பகுதியிலே உயர்கல்வி படிப்பதற்கு வழிவகை செய்த ஒரே தலைவி அம்மா என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆசிரியர்களுக்கு வேலை...

அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு, அறிவியல் கல்லூரி-8, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி-3, ஆக 11 கல்லூரிகள் இந்த ஆண்டு கொடுத்திருக்கின்றது.  ஆக இந்த கல்லூரிகள் மூலமாக ஆங்காங்கே இருக்கின்ற ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். அம்மாவினுடைய ஆட்சியில் தான் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 21,800 பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கி சாதனை படைத்த முதல்வர் நம்முடைய அம்மா. ஏனென்றால், அதற்கு முந்தைய அரசு, இன்றைக்கு பள்ளிகளில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை.  அதனால் கல்வித்தரம் குறைந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில், அம்மா அத்தனை காலிப்பணியிடங்களையும் நிரப்பி ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணியாணை வழங்கிய பெருமை அம்மாவைச் சாரும் என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ரூ. 27,932 கோடி ஒதுக்கீடு

அதேபோல, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஆண்டுக்கு 27,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மற்ற துறையைக்காட்டிலும், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, அதிக நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு என்று இந்த நூற்றாண்டு விழாவின் மூலமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். இதுதவிர, 438 கோடி ரூபாய் செலவில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், 60 கோடி ரூபாய் செலவில் அறிவுத்திறன் வகுப்பறைகள் மற்றும் நடப்பாண்டில் 391 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

வீடுகட்டுவதற்கு ஆணை

அதேபோல, வீட்டுவசதி திட்டத்தின் மூலமாக இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏழை, எளியோருக்கு வீடுகட்டுகின்ற அற்புதமான திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகின்றது.  அம்மாவினுடைய அரசு, இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி விண்ணப்பத்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வீடுகட்டுவதற்கு ஆணை வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.  நம்முடைய பிரதமர் , இராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியபொழுது தமிழ் நாட்டிற்கு எத்தனை இலட்சம் வீடுகள் வேண்டுமானாலும் நான் தருகின்றேன் என்று பேசினார்.

போர்க்கால அடிப்படையில் ....

நெசவாளிகளுக்கு விலையில்லா மின்கட்டண சலுகை, விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு மின்கட்டண சலுகை, வறட்சி காலங்களில், கால்நடைகளுக்கு குறைந்த விலையிலே பசுந்தீவனம் அம்மாவினுடைய ஆட்சியில் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியினர் பல்வேறு கூட்டங்களில் இந்த அரசு நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனைவருக்கும் தெரியும்.  பருவமழை பொய்த்ததின் காரணமாக, தமிழகத்திலே 140 ஆண்டு காலம் இல்லாத கடும் வறட்சி. அணைகளில், குளங்களில், ஏரிகளில் நீர் கிடையாது. நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது.  எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அம்மாவினுடைய அரசு தேவையான நிதியுதவி செய்து, போர்க்கால அடிப்படையில் எடுத்து, அதனை தீர்த்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

33,139 திட்டப்பணிகள் ...

அம்மாவுடைய ஆசியோடு, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 15.8.2017 வரை மாநிலம் முழுவதும் 6872 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 33,139 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 1114 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4199 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். 2016-17-ஆம் ஆண்டில், 22,71,000 மக்கள் பயன்பெறும் வகையில் 960 கோடியே 33 லட்சம் ரூபாய் 24 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.  மணல் குவாரிகளை அரசே இன்றைக்கு ஏற்று, நடத்தி வருகின்றது. அம்மாவினுடைய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.  அம்மா தேர்தல் நேரத்திலே கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்குவேன் என்று குறிப்பிட்டவாறு, இன்றைக்கு அம்மாவினுடைய அரசால், ரூபாய் 12,000-லிருந்து ரூபாய் 18,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மகப்பேறு சஞ்சீவி திட்டம்

இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் தான், அம்மா, கருவுற்ற ஏழைப் பெண்களின் குழந்தைகள் நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சிந்தித்து, சிந்தித்து, அம்மாவினுடைய சிந்தனையிலே உதயமான அற்புதமான, உன்னதமான திட்டம் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள்.  குழந்தைகள் பிறந்தவுடனே நலத்திட்ட உதவிகள் பெறுகின்ற ஒரே அரசு, அம்மாவினுடைய அரசு தான்.

எம்.ஜி.ஆர் ஆட்சியிலும், அம்மா ஆட்சியிலும் முழுக்க, முழுக்க ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம், ஏழைகளுக்கு பொருளாதாரத் தடை நீக்கி, நேசக்கரம் நீட்டி, ஏழைப் பெண்களின் குடும்பத்தை வாழவைக்கும் தாலிக்குத் தங்கம் வழங்குகின்ற திட்டம் - 4 கிராம் தங்கத்திலிருந்து 8 கிராமாகவும், திருமண உதவித் திட்டம் - ரூபாய் 25000-லிருந்து ரூபாய் 50000-ஆகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் அம்மாவினுடைய அரசு உயர்த்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை இரட்டிப்பாக்கி, கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 57000 பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைக்கு மாற்றாக, ஸ்மாட் கார்டு திட்டம் அம்மாவினுடைய அரசிலே செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

எவராலும் பிரிக்க முடியாது

ஏதாவது தொல்லை கொடுப்பதற்காக ஒரு சிலர் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது எம்.ஜி.ஆரால் உருவவக்கப்பட்ட அ.தி.மு.க.  இன்றைக்கு எதிரிகளால் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து, சோதனைகளை சந்தித்து, இந்த இயக்கத்தை தமிழ்நாடு மக்களின் மனத்தில் மேம்படச்செய்து, தமிழர்களின் இதயத்தில் 11 ஆண்டுகாலம் நல்லாட்சி தந்தவர் எம்.ஜி.ஆர். அம்மா பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, பல்வேறு சோதனைகளை சந்தித்து, ஏச்சுக்கள், பேச்சுகள் அனைத்தையும் சந்தித்து, வெற்றி கண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், வசதிபடைத்த மக்கள் அனுபவிக்கும் வசதிகளை, ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெறவேண்டுமென்று மக்களின் ஆட்சி நடத்தியவர், மக்களின் இதயங்களில் இடம்பெற்றவர் அம்மா.  இருபெரும் தலைவர்களின் ஆசியாலும், ஆன்மாவாலும் நடைபடுத்தப்படுகின்ற இந்த அரசு, மற்றும் அம்மாவின் ஆன்மா எங்கள் பக்கம் பலமாக இருக்கும் வரை எவராலும் இந்த ஆட்சியையும், கட்சியையும் மக்களின் இதயத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது, ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல திட்டங்கள் ....

இந்த அரசு ஊழல் அரசு என்று பேசுகின்றார்கள். நேற்று வரை எங்களோடு இருந்தார்கள், ஆட்சியில் பங்கெடுத்தார்கள். திடீரென்று, இன்று எப்படி ஊழல் அரசு என்று குற்றம் சாட்டுகின்றார்கள் என்று அவர்களுக்குத் தான் தெரியும், அவர்களுடைய மனசாட்சிபடியே நாங்கள் விட்டுவிடுகின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அம்மாவினுடைய அரசால் சில திட்டங்கள் இன்றைக்கு நடைமுறைபடுத்தப்பட்டது. மேலும், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கையும் அரசினுடைய பரிசீலனையில் இருக்கின்றது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து