முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண் வளத்தை பாதுகாக்க தக்கப்பூண்டு பயிர் செய்வோம்

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

நமது நாட்டில் கடந்த இருபது வருடங்களில் உணவு தானிய உற்பத்தி பல மடங்காக பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக உயர் விளைச்சல் இரகங்களை பயிரிடுவது. உலகில் இன்றைய சூழலில் மகசூலை அதிகரிப்பதற்காக நாம் பெருமளவில் இரசாயன உரங்களையே பயன்படுத்துகிறோம். நாளடைவில் இரசாயன உரங்கள் மண்ணின் தன்மையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த உரங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் விவசாய பெருமக்கள் உரங்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படியெனில் அதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பது தான் பசுந்தாள் உரப்பயிரான தக்கப்பூண்டு. தக்கப்பூண்டு என்பது தண்டு பகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப்பயிராகும். இப்பயிரின் மூலம் வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலை நிறுத்தபடுகிறது. இதன் மூலம் இரசாயன நைட்ரஜன் உரமிடும் அளவை குறைக்கலாம்.

தக்கப்பூண்டின் குணாதிசயங்கள் :

1. குறுகிய காலப்பயிர், அதிவேக வளர்ச்சி மற்றும் உயிர் ஊட்டத்திறன்.

2. நிழல், நீர்தேக்கம், வறட்சி, மற்றும் பல்வேறு தட்பவெப்ப நிலைகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

3. விரைவான தழைச்சத்து நிலைபடுத்தும் திறன்.

4. அதிக தழைச்சத்து கிரகிப்பு மற்றும் தேக்கதிறன் கொண்டது.

5. தக்க நேரத்தில் ஊட்டசத்து வெளியிடும் பயிர்.

6. அதிக விதை முளைப்புத் திறன்.

7. அதிக விதை உற்பத்தி திறன் கொண்டது.

8. பூச்சி மற்றும் பயிர் நோய்கள் எதிர்ப்பு தன்மை கொண்டது.

பயன்கள் :

1. மண்ணில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை சாதகமாக்குகிறது.

2. மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை நிலைப்படுத்துகிறது.

3. கடினமான மண்ணில் துளைகளை ஏற்படுத்தி காற்று பரிமாற்றம் மற்றும் வடிகாலுக்கு உதவுகிறது.

4. நிலத்தை உழும்போது அடிமட்ட அடுக்குகளிலுள்ள ஊட்டசத்துகளை உறிஞ்சி மேல்மட்டத்திற்கு கொண்டு வர உதவுகிறது.

5. மண்ணின் அடிமட்ட அடுக்குகளில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுக்கிறது.

6. தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது.

7. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகபடுத்தும்.

தக்கப்பூண்டின் பசும்பொருள் உற்பத்தியும் தழைச்சத்து நிலை நிறுத்தும் திறனும்

பசும்பொருள் உற்பத்தி

(டன்/ஹெக்டேர்) தழைச்சத்து நிலை நிறுத்தும்

(கிலோ/ஹெக்டர்) – 60 நாட்களில்

8.5 – 10.0 

150 - 225

தக்கப்பூண்டு    பசுந்தாள் உரப்பயிர் உற்பத்தியை பற்றி காண்போம்

பருவம்: அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் விதைப்பது விதை உற்பத்திக்கு நல்லது.
மண்: வண்டல் மண் ஏற்றது.

விதையளவு: பசுந்தாள் உரத்திற்கு – 25-35 கிலோ/ ஹெக்டர்

விதை – 20 கிலோ/ ஹெக்டர்.

விதைநேர்த்தி: ஹெக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இடைவெளி: விதைகளை தூவ வேண்டும்.

பசுந்தாள் உரப்பயிருக்கு 30 x 10 செ.மீ

விதை உற்பத்தி – 45 x 20 செ.மீ

30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: விதைத்த 45 -60 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும்.

விதை உற்பத்தி: விதைத்த 150வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும்.

மகசூல்:

பசுந்தாள் உரம்  – 13-15 டன் / ஹெக்டர்

விதை  - 400 கிலோ/ ஹெக்டர்

எனவே விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் வருடம் ஒரு முறையாவது தக்கப்பூண்டை பயிர் செய்து மண் வளத்தை பாதுகாப்புடன் மண்ணில் உள்ள ஊட்டசத்துக்கள் கரைவதை தடுப்போம்.

மேலும் தக்கப்பூண்டு விதையை வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர், சேலம் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0427 – 2422550-ணை அணுகவும்.

அ.காயத்திரி,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து