முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. என்கவுன்டர் உள்ளிட்ட பிரச்சினைகளால் பார்லி.யில் எதிர்க்கட்சியினர் அமளி

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உ.பி. என்கவுன்டர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை ஒத்திவைப்பு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜஸ்தானின் அல்வார் தொகுதியில் வெற்றி பெற்ற கரன் சிங் யாதவ், அஜ்மீர் தொகுதியில் வெற்றி பெற்ற ரகு சர்மா, மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா தொகுதியில் வெற்றி பெற்ற சஜ்தா அகமது ஆகியோர் பதவியேற்றனர். அதன்பின்னர், சமீபத்தில் மரணம் அடைந்த உத்தர பிரதேச எம்.பி. ஹூக்கும் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசித்தார். அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனை அடுத்து மக்களவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது.

கூச்சல் - குழப்பம்

இதேபோல், மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதால் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்தில் நடந்த என்கவுன்டர் கொலைகளைக் கண்டித்து சமாஜ்வாடி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அவையின் மையப்பகுதியில் அவர்கள் ஒன்று திரண்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி எம்.பி.க்கள்...

இதேபோல் டெல்லியில் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். ஆந்திர எம்.பி. ராமச்சந்திர ராவ், ஆந்திராவுக்கு நீதி வேண்டும் என்று பேனரை ஏந்தி நின்றார். இதுபோன்ற சூழ்நிலைகளால் கடும் அதிருப்தி அடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.  ‘அவை சுமூகமாக நடப்பதை நீங்கள் விரும்பவில்லை. கேள்வி நேரத்தையும் விரும்பவில்லை. இதுபோன்று அவையை நடத்த நான் விரும்பவில்லை’ என்று கோபமாக கூறினார் அவைத்தலைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து