முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் மயான கொள்ளை தேர்திருவிழா

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் மயான கொள்ளை தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பன்னீர்செல்வம் தெருவில் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மஹா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கியது

தேர்திருவிழா

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 5 மணியளவில் முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணி முதல் 9 மணி வரை அம்மன் ஸர்வ அலங்கார தரிசனம், பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்தியபடி வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார். 50க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து வந்தனர். மேலும், அலகு குத்திக்கொண்டு கோயில் வலம் வந்தனர். காலை 9 மணியளவில் அலகு குத்திக் கொண்டு மயனம் செல்லுதல் மற்றும் திருத்தேர் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக புறப்பட்டு, காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.

அப்போது வீதியின் இருபுறமும் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம் சாமியை தரிசனம் செய்தனர். 100 அடி தூரத்திற்கு பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து சாமிக்கு தீப ஆராதனை மற்றும் மலர் தூவி வணங்கி சென்றனர். 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்த போது குழந்தைகளையும் தூக்கி வந்து அம்மனை வழிபட்ட காட்சி அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து சாமியின் தேர் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து ஆற்றங்கரையை சென்றடைந்தது.

தென்பெண்ணை ஆற்று பாலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்ததால் இவ்வழியே செல்லும் அனைத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் காவேரிப்பட்டணம் நகருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அசம்பாவித நிகழ்விகளை தடுக்கும் பொருட்டு எஸ்பி மகேஷ்குமார் உத்தரவின் பேரில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று(15ம்தேதி), காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டை ஸ்ரீ பூங்காவனத்தமன் கோயிலில் மயான சூறை திருவிழா நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து