முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானமதுரை அருகே கோஷ்டி மோதல் 2 பேர் வெட்டிக்கொலை பதற்றம் போலீஸ் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை,-  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது ஆவரங்காடு. அதை அடுத்துள்ள கிராமம் கச்சநத்தம். இந்த 2 கிராமங்களிலும் வெவ்வேறு பிரிவினர் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராம மக்களிடையே ஜாதிய ரீதியான மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதனால் இரு கிராமத்தினரை அடிக்கடி போலீசார் சமரசம் செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதிலும் இரு கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஆவரங்காடு வழியாக வந்துள்ளனர். அப்போது ஆவரங்காட்டைச் சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர்கள் ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்ததால் அங்குள்ள சிலர் ஆத்திரமடைந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராமத்துக்குள் புகுந்தனர். அங்கு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது.
இதில் ஆறுமுகம் (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த சண்முகராஜனை (27) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாகக உயிரிழந்தார். சண்முகராஜன் என்ஜினீயர் ஆவார்.
மேலும் அரிவாளால் வெட்டப்பட்ட தனசேகரன் (52), அவரது மகன் சுகுமார் (22), மலைச்சாமி (55), சந்திரசேகர் (35), தெய்வேந்திரன் (48), மகேஸ்வரன் (18) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.
அவர்களை உடனடியாக மீட்டு மதுரை, சிவகங்கை, மானாமதுரை ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு கிராம மக்களிடையே மேலும் வன்முறை வெடிக்காத வண்ணம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 2 பேர் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 20 பேரை தேடி வருகிறார்கள்.இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து