முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் துயரங்கள் தூசியாய் பறக்கும்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சீரடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சாய்பாபா பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால்தான் ஊர்தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வகையில் உருவாகி வருகின்றன.

சிறுவயதில் பாபாவை முகம்மதிய பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார். அந்த பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார். பாபாவை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார். அபப்டியிருந்த அவர் ஒரு நாள் திடீரென இறந்து விட்டார். ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்து சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து இச்சிறுவனை கவனித்து கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார். கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டவர். மக்கள் இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர்.

குழந்தையான பாபாவை பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு சாட்சாத் வெங்கடாஜலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாபாவை தனது மகனை போலவே கருதி வளர்த்து வந்தார். பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக  எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார். பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் ஏழுமலையான் பக்தர் என்பதால் பாபாவுக்கு வெங்கடேச பெருமாளின் அருளும் கிடைத்தது. குருவும், சீடனும் மிகவும் அன்புடனும், மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் பொறாமை கொண்டனர்.

ஒரு சமயம் குருவும், சீடனும் தனிமையில் இருக்கும் போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டியது. அந்த கொடியவன் அதோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான். இதைக் கண்ட  கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்த கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. என்னால் தானே உங்களுக்கு தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள் என்று குருவிடம் பாபா கேட்டார். இதை கேட்ட குரு மிகவும் கண்கலங்கினார்.

அப்போது பாபா மனம் வருத்தப்படாதே. உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாக போகிறது. நானோ விரைவில் இந்த பூமியை விட்டு நீங்கி செல்ல போகிறவன். அதனால் இறையருளால் எனக்கு கிடைத்த சகல வரங்களையும், சக்திகளையும் உனக்கு தாரை வார்த்து தரப் போகிறேன் என்று கூறினார். அவர் அதோடு நிற்காமல் உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு அருகே இருந்த பசுவிடம் பாலை கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையை கேட்ட பாபா, பசுவிடம் பாலை கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனை கேட்டார். ஐயா. இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை. ஆனபடியால் இது பால் கறக்காது என்று சொந்தக்காரன் சொன்னான். இதை கேட்ட பாபா அவனையும், அவனது பசுவையும் குருவிடம் அழைத்து சென்றார். குரு பசுவின் மடியில் கை வைத்து தடவி கொடுத்தார். என்ன ஆச்சரியம், மடியில் கைவைத்தவுடன் பால் அதிகளவில் சுரந்தது. பாபா பாலை கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலை பெற்றுக் கொண்ட குரு, இன்று முதல் இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன் என்று கூறி பாபாவிடம் பாலை கொடுத்தார்.

அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான். இதை கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதை கேட்ட குரு, இவ்வாறு சொன்னார். இனி எந்த சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கொள்ளுங்கள் என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களை கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாக கிடந்தவன் மேல் தூவினர். உடனே இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். அப்படியே நெடுஞ்சாண்கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

கோபால்ராவ் தேஷ்முக் வெங்கடேச பெருமாளை வேண்டி தாம் முன்பே கூறியது போல தவயோகம் செய்தார். தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்கு திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா சீரடி கிராமத்தை அடைந்தார். பாபா 1854-ம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை. சில ஆண்டுகள் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒரு முறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்த போது பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார்.

சாந்த் பட்டேல் தன் வீட்டிற்கு பாபாவை அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவை தங்க வைத்து உபசரித்தார். சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்ற போது பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தை கண்ட மகால்சாபதி எனும் பூசாரி அவரை சாய் என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் அப்பா என்று பொருள். இரண்டும் இணைந்து சாய்பாபா என்ற திருப்பெயராக நிலைத்து விட்டது.

சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்பு சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார் என்று கேட்டார்கள். அதற்கு அவர், நானே அல்லா, நானே சங்கரன், நானே ஸ்ரீகிருஷ்ணன், நானே அனுமன் என்று கூறினார். ஆமாம் அவர் இப்பூமியில் இறை அம்சம் கொண்டவராகவே அவதரித்தார்.

சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியை போல் வாழ்ந்தார் பாபா. அவரது தெய்வீக தன்மையை உணர்ந்தவர்கள் அவர் ஒரு மகான் என்று போற்றினார்கள். பாபாவின் அருளாலும், கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் ஒரு யோகியை போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவை சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீக தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார். பாபா தான் தங்கியிருந்த துவாரகமாயீ எனும் பகுதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர். ஒரு நாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவை தேடி பக்தர்கள் வரத் தொடங்கினர்.

ராதாகிருஷ்ணமாயி எனும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்து கொண்டதோடு உணவும் சமைத்து வந்தார். பாபாவை தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருக செய்தார் பாபா. தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்க சிரிக்க பேசி குழந்தைகளை மகிழ செய்தார். ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா. தொழுநோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு எல்லாம் விபூதியையே பிரசாதமாக தந்து அவர்களின் நோய்களை நீக்கியவர். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூடப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அவர் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் நாள் தன் ஸ்தூல உடலை பிரிந்தார். உபதேசம் அளித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் புரிந்த பாபா தான் கூறியபடியே தீன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார். கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வார்த்தை உடனே அளிக்கும் வள்ளலாக திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும் ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து