முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நாகை அருகே 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 720 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வட கிழக்காக 820 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெறுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன் பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழக கடற்பரப்பில் கடலூர் - பாம்பன் பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் நாளை மறுநாள் 15-ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு...இந்த புயல் சின்னமானது சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நாளை 14-ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இது மேலும் படிப்படியாக உயர்ந்து நாளை 14-ம் தேதி நள்ளிரவில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அந்த நேரத்தில் கடல் பரப்பு மிக மோசம் முதல் மிக மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மிகக் கன மழை...தற்போதைய நிலவரப்படி நாளை இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும். கன மழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாருர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து