முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜாமீன் நிராகரிப்பு - ப. சிதம்பரத்தை 5 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க அனுமதி - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை வரும் 26-ம் தேதி வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை(இன்று) விசாரணை செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிதம்பரம் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டுக் கதவு மூடியிருந்ததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அரசியல் பரபரப்பு காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து விசாரணைக்காக சிதம்பரம் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்தனர். மேலும் சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளையே சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்கிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு கேள்விகளே இல்லை என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைத்தார். அது போலவே 10 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தற்போது சிதம்பரத்தை கைது செய்தது ஏன்? என சிங்வி கேள்வி எழுப்பினார். அது போலவே சி.பி.ஐ. தரப்பு வாதமும் முன் வைக்கப்பட்டது. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சிறிது நேரம் நீதிபதி ஒத்தி வைத்தார். பின்னர் சி.பி.ஐ. கோரியபடி வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) வரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு  தீவிர விசாரணைக்குப்பின் வரும் திங்கட் கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து