முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெற்றிக் களிப்பில் மிதந்த அ.தி.மு.க. தலைமை கழகம் - முதல்வர் எடப்பாடி கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை தொடர்ந்து கட்சியின் தலைமைக் கழகம் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமயமாக காணப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று காலை முதலே தொண்டர்கள் திரண்ட வண்ணமிருந்தனர். இரு தொகுதிகளின் நிலவரத்தை அவ்வப்போது அறிந்த அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் ஆட்டம், பாட்டத்தோடு வெற்றிக்களிப்பில் மிதந்தது.

பகல் 1-30 மணியளவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார். அவரை முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, சோழிங்கநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் கற்பகம், கஸ்தூரி ஆகியோர் உள்ளிட்ட  பூங்கொத்துக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வர் எடப்பாடியார் வாழ்க என்று தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர். வெற்றிக்களிப்பில் இருந்த தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி லட்டு வழங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார். அதைத்தொடர்ந்து மதுசூதனன் முதல்வர் எடப்பாடிக்கு இனிப்புகளை வழங்கினார். அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கே.டி. ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, சரோஜா, எம்.சி. சம்பத், கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகை செல்வன், பெஞ்சமின், பாடநூல் வாரியத் தலைவர் பா. வளர்மதி, முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி படமெடுத்து கொண்டார். இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் இந்த வெற்றியை அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து