முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது - அமைச்சர் அன்பழகன் இல்ல விழாவில் முதல்வர் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தருமபுரி : விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தல் வெற்றியின்  மூலம் அ.தி.மு.க மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் - மல்லிகா அன்பழகன் ஆகியோரது இல்ல திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளி கிராமத்தில் தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

அம்மாவின் அன்பையும், பாராட்டையும் பெற்று அவருடைய அமைச்சரவையில் உயர்கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பேற்று,  அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் கே.பி.அன்பழகனின் இளைய மகனான சசிமோகன், பூர்ணிமா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடினமான உழைப்பாளி, சிறந்த பண்பாளர், எளிமையாக பழகக்கூடியவர்.  அம்மாவின் உள்ளத்தில் இடம்பெற்றவர் அமைச்சர் கே.பி. அன்பழகன். இதனால் 2016 -ம் ஆண்டு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

தருமபுரி அ.தி.மு.க. கோட்டை

மேலும் சிறந்த நிர்வாகம் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம் தான் உயர்கல்வி பயில்வோர் 49 சதவிகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. இது, உயர் கல்வியில் ஒரு சகாப்தம். வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலின்போது அமைச்சர் கே.பி. அன்பழகன் நிரூபித்துள்ளார். கட்சியினரையும், கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியை அளித்ததற்கு அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதவிர, அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இது ஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அ.தி.மு.க.வின் வலிமையை மக்கள் மன்றத்தில் நிருபித்துள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, கே.சி.வீரமணி, ஆர்.பி. உதயகுமார், கருப்பண்ணன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன்,சட்ட பேரவைத்தலைவர் தனபால், பாடநூல் கழக தலைவர் வளர்மதி, முன்னாள் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன், வைகைச்செல்வன், கோகுல இந்திரா, பாலகிருஷ்ணரெட்டி, மோகன், தாமோதரன், மதாவரம் மூர்த்தி, சின்னய்யா, சிவபதி, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, கோவிந்தசாமி, சம்பத்குமார், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்கள் தொ.மு.நாகராஜன், விஸ்வநாதன், கூட்டுறவு ஒன்றியத்துணை தலைவர் எம்.பொன்னுவேல், தலைவர் மாதையன்,  தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவப்பிரகாசம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து