முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை.யை 2-ஆக பிரிக்கும் சட்டமுன்வடிவு உட்பட 4 மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த திங்கள் கிழமை தொடங்கிய தமிழக சட்டசபை நேற்றுடன் நிறைவடைகிறது. நேற்று 3-வது நாள் சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய முதல், கொரோனா, நீட், பிரதமர் கிசான்  திட்டத்தில் முறைகேடு   உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடப்பு  ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 2020-21 ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்ற அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. அறக்கட்டளை உருவாக்குவற்கான  சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமுன்வடிவு மசோதாவை சட்டப்பேரவையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக்  கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. இணைப்பு அந்தஸ்து பெற கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக் கழகம் 2 ஆக பிரிக்கப்படுகிறது.

அண்ணா  பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.  திருமணங்கள் பதிவு செய்தல் மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்தார். மணமகன், மணமகள் திருமணம் நடைபெற்ற இடத்தில் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம்  கொண்டு வரப்பட்டுள்ளது.

மணமகன், மணமகள் சொந்த ஊரிலும் திருமணங்கள் பதிவு செய்யலாம் என்ற சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தனி அலுவர்களின் பதிவிக்காலத்தை நீட்டிப்பதற்கான  சட்டமசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.  

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் ஆறாயிரம் மருத்துவ இடங்களில் 500 இடங்கள் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து நீட்  தேர்வில்  வெற்றிபெறுவோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மசோதா சட்டபேரவையில் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது. 

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம். விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள், தனி நபர் இடைவெளியை பின்பற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து