முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங், பா.ஜ.க.வைத் தோற்றுவித்தவர்களில் குறிப்பிடத்தக்க தலைவராக விளங்கினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சர், வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் 

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தொடர்ந்து மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பி்ல்,  முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்  27-ம் தேதி காலை 6.55 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

கடந்த ஜூன் 25-ம் தேதி பல்வேறு உடல்உறுப்புகள் செயலிழந்தது தொடர்பாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(நேற்று) காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங்கின் உயிர் பிரிந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டம், ஜசோல் கிராமத்தில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ஜஸ்வந்த் சிங். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவரான ஜஸ்வந்த் சிங் தனது 60 வயதுகளில்தான் அரசியலுக்குள் நுழைந்தார்.  ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலவைர் அத்வானி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங் கட்சியில் சேர்ந்தார்.

ஜஸ்வந்த் சிங்கின் திறமைக்குக் குறுகிய காலத்திலேயே பா.ஜ.க.வில் மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்தது.  1996-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையில் வாஜ்பாய் ஆட்சியில் நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் பொறுப்பேற்றார். அதன்பின் 1998-2002 ஆம் ஆண்டு வரையிலான வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் பதவி வகித்தார்.

கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு மாநிலங்களவையில் பா.ஜ.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவைப் புகழந்து பேசியிருந்ததால், பா.ஜ.க.விலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜஸ்வந்த் சிங்கிற்கு பார்மர் ஜெய்சல்மார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் சுயேச்சையாக ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டு, சோனாராம் சவுத்ரியிடம் தோல்வி அடைந்தார். மேலும், கடந்த 2012-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கும் ஜஸ்வந்த் சிங் முன்மொழியப்பட்டார். ஆனால், நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹமீது அன்சாரியிடம் ஜஸ்வந்த சிங் தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து