முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து கவர்னரிடம் கூறினோம். விரைவில் உரிய முடிவு எடுப்பதாக அவர் கூறினார் என்று  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழக அரசு முடிவு செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் வந்த போது நீட் தேர்வு முடிவு வந்துள்ள நிலையில், ஒப்புதல் வழங்கக் கோரி கவர்னரை நிர்பந்திக்க முடியாது. ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரையில் மருத்துவக் கவுன்சிலிங் இல்லை என தமிழக அரசு தெரிவித்தது.  இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மருத்துவக் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்க முடியாமல் தள்ளிப் போவதால் நேற்று 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு கவர்னரை சந்தித்துக் கோரிக்கை வைத்தது.

கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், 7.5 சதவீத  உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே சாத்தியம் என்கிற எண்ணத்தில் முதல்வர் முயற்சியால் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அது சட்டமாக்கப்படும் போது அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக முடியும். எனவே, அதற்கு ஒப்புதல் கோரி அமைச்சர்கள் 5 பேர் கவர்னரை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழலைத் தெரிவித்தோம்.

குறிப்பாக கிராமப்புற, நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்கள் மருத்துவர்களாக முடியும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு அடையாளம், அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 7.5 சதவீத  உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் கவுன்சிலிங் உள்ள நிலையில் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம்.

நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்ட கவர்னர், விரைந்து முடிவெடுக்கிறேன். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அதில் திருத்தங்கள் எதையும் சொல்லவில்லை. முதல்வர் கோரிக்கையைத் தெரிவித்த பிறகு உடனடியாக விரைவில் முடிவெடுக்கிறேன் என்று கவர்னர் தெரிவித்தார். தமிழகத்தில் கவுன்சிலிங் நடக்காததையும், நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கவுன்சிலிங் நடக்கும் என்பதையும் கவர்னரிடம் கூறி விட்டோம். அவர் கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று கூறினார்.  இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து