முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன். நிச்சயமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.  கொரோனா  தடுப்பு முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் பேரை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடிய ஒரு தொற்றுநோய். இதனால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், லட்சக்கணக்கானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றார்கள்.  இதற்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்காமல் இருந்து வந்த சூழ்நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விடாமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதை இன்றைய தினம் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்து இருக்கிறார்.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றுகின்ற மருத்துவ முன்களப் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, முதற்கட்டமாக, அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியை போடும் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி  டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில், மதுரையில் இந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, முதற்கட்டமாக நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி போடப்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு முறை போடப்படும். இந்தத் தடுப்பூசி முதல் முறை போடப்பட்டு 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை போடப்படும். இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 42 நாட்கள் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த நோய்த் தாக்குதலிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 166 முகாம்களில் இந்தத் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என 226 இடங்களில் முதற்கட்டமாக ஒத்திகை செய்யப்பட்டு, தற்போது அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக நாம் பார்க்கின்றோம்.

இது உயிர் பிரச்சனை, இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமா? முடியாதா? என்றிருந்த ஒரு சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விடாமுயற்சியாக, இந்தியாவில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும், அவர்கள் இந்தத் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்று கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளதற்கு அவருக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- சென்னையில் அரசு மருத்துவமனைக்கு ஏறத்தாழ ஆறாயிரம் தடுப்பூசிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனைக்கு…

பதில்:- முதற்கட்டமாக, தமிழகத்திற்கு 5,36,500 கோவிஷீல்டும், 20,000 கோவாக்ஷின் என மொத்தம் 5,56,500 எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இது முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இதில் அரசு, தனியார் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.

கேள்வி:- நீங்கள் தடுப்பூசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- நானும் போட்டு கொள்வேன். நீங்களும் போட்டுக் கொள்ள வேண்டும். நிச்சயமாக அனைவரும் எடுக்க வேண்டும். இந்திய நாட்டிலிருக்கின்ற அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எளிதாக தொற்று ஏற்பட்டுவிடுமென்பதால், நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், அரசு மற்றுத் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக இந்தத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கேள்வி:- நீங்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளீர்கள். ஆனால், ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற…

பதில்:- இது ஒரு நல்ல நாள், வேறு கேள்விகள் கேட்டு இதனை திசை திருப்ப வேண்டாம். இந்த நாடே, ஏன்? இந்த உலகமே கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்து, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், அதிலும், இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்படுமென்ற சூழ்நிலை ஏற்பட்டு, அதைக் கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல நாள். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டால் நம்முடைய மனநிலை எப்படி இருக்கும்? எனவே, இந்தியாவிலுள்ள அனைவரையும் குடும்பத்தில் உள்ளவர்களாகக் கருதித்தான் இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, இன்று முதற்கட்டமாக, மருத்துவத் துறையில் பணிபுரிகின்ற முன்களப் பணியாளர்களுக்கு போடப்படுகிறது. 

கேள்வி:- நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? இல்லையா? என்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது?

பதில்:- முதன்முறை தடுப்பூசி போடப்பட்ட பின் 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக போடப்படும். அதன் பிறகு 42 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கென, முழு விவரங்கள் அடங்கிய ‘கைடுலைன்’ புத்தகம் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய மருத்துவர்களை கலந்தாலோசித்து, எனக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் நான் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி:- சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மட்டும் கோவாக்சின் தற்போது பயன்பாட்டில் இல்லையென்று சொல்லியிருக்கிறார்கள். மூன்றுகட்ட பரிசோதனை முடிந்தபின்தான் பயன்படுத்தப்படுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இதைக் கொண்டு வந்துள்ளீர்களே?

பதில்:- மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, பாரதப் பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். அதையொட்டி நாமும் தமிழகத்தில் தொடங்கி வைத்திருக்கின்றோம். மத்திய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாக, நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து, பல்வேறு சோதனைகளைச் செய்து, அதையெல்லாம் சரி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் டி.சி.ஜி.ஐ. துறையால் முழு ஆய்வு செய்யப்பட்டு, பலகட்ட சோதனைகள் நடைபெற்று முடிந்த பிறகுதான் தடுப்பூசியே வெளியிடப்பட்டது. 

கேள்வி:- அரசு எவ்வளவுதான் சொன்னாலும், மக்களுக்கு இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற பயம் இருக்கிறதே, 

பதில்:- முதலில் அவ்வாறு இருக்கத்தான் செய்யும். முதன்முதலாக, இன்று அரசு மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த தலைவர் செந்தில் போட்டுக் கொண்டார். பிறகு, அகில இந்திய அளவில் இருக்கின்ற மருத்துவச் சங்கத்தின் தலைவர் போட்டுக் கொண்டார். பிறகு மருத்துவர்கள், செவிலியர்கள் போட்டுக் கொண்டார்கள். மருத்துவர்களே போடுகிறார்களென்றால், சரியாக ஆராய்ச்சி செய்துதான் இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், இந்த ஊசி சரியாக போடப்பட்டால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுமென்று கருதித்தான் செய்கிறார்கள். நாம் சாதாரண மக்கள், நோய் வந்தால் நாம் இந்த மருத்துவர்களிடம்தான் செல்கிறோம், அவர்கள்தான் நம்மை காப்பாற்றுகின்றார்கள். அப்படி நம்மை காப்பாற்றுகின்றவர்களே முன்னிருந்து, இன்று தமிழகத்தில் முதன்முதலாக அரசு மருத்துவர் சங்கத் தலைவராக உள்ள அவரே போட்டுக் கொண்டுள்ளார் என்றால், இதில் தவறு நடப்பதற்கில்லை. முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும், போகப் போக அது சரியாகி விடும். 

கேள்வி:- கொரோனா வைரஸ் தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் நபர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்களா?

பதில்:- படிப்படியாக அவர்களை நிரந்தரம் செய்வதற்கு அரசு பரிசீலிக்கும். இது ஒரு நல்ல நாள். நீங்கள் பத்திரிகையிலும், ஊடகத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், வெளியே சென்று வீடு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

இவற்றை ஒவ்வொருவரும் தவறாமல் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தமிழகத்தில் நிலையாக தவிர்க்கலாம். தற்போது லண்டனில் மறுபடியும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வந்து விட்டது. அங்கு நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட படுக்கை வசதி இல்லை. எனவே, மீண்டும் நோய் வந்துவிட்டால், மிகவும் சிரமம் ஏற்படும். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650-க்கும் குறைவாக இருக்கிறது, இறப்பும் குறைந்திருக்கிறது.

ஆனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் குறைந்து கொண்டிருப்பதால் நமக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படாது என்று யாரும் நினைக்கக் கூடாது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்று என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்ற கருத்தை அம்மாவின் அரசு மக்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை தமிழகத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து