முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை 27-ம் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்: துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது.  இதன் அடிக்கல் நாட்டு விழா 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  

ரூ. 50 கோடியே 80 லட்சம் செலவில் இத்தாலி மார்பிள், பளிங்கு கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டு இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நினைவிடத்தை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி நினைவிட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து உள்ளது. 

இந்த நிலையில், வரும் 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 11 மணிக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின்  நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை 27.1.2021 புதன் கிழமை காலை 11.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்.   

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.  இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து