முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு :தேவஸ்தானம் நடவடிக்கை

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான கூட்டம், தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி மற்றும் இணை செயல் அதிகாரி சதா பார்கவி தலைமையில் நடந்தது.

1974-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் இருக்கும் திருப்பதி கோவில் சொத்துக்கள் என்னென்ன, அதன் தற்போதைய நிலை என்ன அவற்றின் மீதான சட்ட ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டன.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த அசையா சொத்துக்கள் அனைத்தையும் ஆன்மீக விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வேறு பணிகளை மேற்கொண்டால் அது பக்தர்கள் மனதை புண்படுத்தும். இந்த நிலப்பகுதிகள் ஒருபோதும் விற்பனை செய்யப்படாது. சிறிய நிலப்பகுதிகளில் கோசாலை, கீதா மந்திரங்கள் அமைத்து உள்ளூர் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைவேற்றும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. திருப்பதி நகரில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான 22 நிலப்பகுதிகள் அமைந்துள்ளன.

பைராகி பட்டேடாவில் 8, கேசவாயனகுண்டா மற்றும் எம்.ஆர். பள்ளியில் 14 இடங்கள் இருக்கின்றன.

இவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான இணைசெயல் அதிகாரி சதா பார்கவி நேரில் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதனால் அந்நியர்கள் பலர் ஆக்கிரமிக்கும் வேலைகளில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செயல் அதிகாரி சதா பார்கவி, அந்த நிலப்பகுதிகளில் உரிய பலகைகள் வைக்க ஏற்பாடு செய்தார்.

கம்பி வேலிகள் அமைக்கவும், காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்டேட்ஸ், பொறியியல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு செயல்வீரர்கள் குழு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து