முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இளவரசர் என்னை ஏமாற்றி விட்டார்: சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : திருமணம் செய்து கொள்வதாக கூறி இங்கிலாந்து இளவரசர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அம்மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த யாச்சி என்ற பெண், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, எனது மனுதாரர் (யாச்சி) என்பவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். எனவே, இளவரசர் ஹாரிக்கு எதிராக இங்கிலாந்து போலீஸ் பிரிவு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இம்மனு மீதான முதற்கட்ட விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டது. பின்னர், மனுதாரரை நேரில் வரவழைத்து ஐகோர்ட் நீதிபதி அரவிந்த் சிங் சங்வான் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்வது குறித்து தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவானது, கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்ட மனுவாக உள்ளது என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கும், இளவரசர் ஹாரிக்கும் இடையிலான சில மின்னஞ்சல்களில், அவர் மனுதாரரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உறுதியளித்துள்ளார் என்றார். அப்போது நீதிபதி, மனுதாரர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளாரா? இளவரசரை நேரில் பார்த்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், இணைய ஊடகங்கள் மூலம் இளவரசரிடம் மனுதாரர் பேசியுள்ளார் என்றார். முழு விசாரணையும் முடிவுற்ற நிலையில் நீதிபதி அரவிந்த் சிங் சங்வான் அளித்த உத்தரவில், நீங்கள் ஆதாரமாக காட்டும் அச்சுப்பிரதிகள் உண்மையானது அல்ல.  அவை நகல்களாகவும், பகுதி நீக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணைய ஊடக தளங்களில் போலி ஐ.டி.கள் உருவாக்கப்பட்டு இதுபோன்று மோசடி புகார்கள் அதிகம் வருவது அனைவரும் அறிந்ததே.  மனுதாரருக்கும், இளவரசருக்கும் நடந்த உரையாடல்களின் நம்பகத்தன்மையை உங்களால் நிரூபிக்க முடியுமா? நீங்கள் தாக்கல் செய்த மனுவில் எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை. போலி உரையாடல்களை உண்மை என்று கருதி ஏமாற்றமடைந்த மனுதாரருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். கனவு உலகில் வாழும் மனுதாரர், அதில் இருந்து வெளியே வரவேண்டும். அதேநேரம், அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து